திங்கள், 12 செப்டம்பர், 2016

சந்தோஷ வாழ்வு தரும் திருவோணம்
கருத்துகள்
www.danvantarinadi.com
திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது.

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே ‘‘திரு’’ என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மாவலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

மாவலி சக்கரவர்த்திக்கு முக்திப் பேற்றினை வழங்கிய திருவோணத்தன்று, மக்கள் வாழ்வில் அனைத்து நலனும் பெற வேண்டி பெருமாளை நோக்கி விரதம் இருந்து வழிபடுகின்றனர். சந்தோஷ வாழ்வு அருளும் திருவோண விரதத்தை கேரள மக்கள் ‘ஓணம் பண்டிகை’யாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை அனைத்து மக்களும் சாதி, சமய பாகுபாடு இன்றி கொண்டாடுவது தனிச்சிறப்பாகும். ‘காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடு’ என்ற பழமொழி, இந்த பண்டிகையின் பெருமையை பறை சாற்றுகிறது.

தமிழ் மாதமான ஆவணி மாதத்தை, கேரளாவில் ‘சிங்க மாதம்’ என்று அழைப்பர். அந்த மாதத்தை அவர்கள் ஆண்டின் தொடக்க மாதமாகவும் கருது கிறார்கள். அந்த மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தன்று வளர்பிறையில் இந்தப் பண்டிகை வருகிறது.

கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடப்படுகிறது.

அதைப்போல் ஓணம் பண்டிகை தோன்றியதற்கும் ஒரு கதை உண்டு.

தமிழகத்தில் நாகை மாவட்டம் கடற்கரையையொட்டி திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யம் நகர் உள்ளது. அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் தனது திருமண காட்சியை காட்டி அருளிய தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவிலில், ஒரு முறை அர்த்தசாம பூஜை முடிந்து கதவு தாழிட்ட பின், கருவறை விளக்கு அணையும் தருவாயில் இருந்தது.

அப்போது இறைவன், ‘இத்திரியை யார் தூண்டி விடுகிறார்களோ, அவர்களுக்கு அரச பதவியும், மறுபிறவியில் வீடு பேற்றையும் தருவோம்’ என்றார். அப்போது விளக்கின் நெய்யை குடித்திட வந்த எலியின் மூக்குப்பட்டு தீபம் தூண்டப்பட்டது. அந்த எலியை பின்நாளில் மகாபலி மன்னராக பிறக்குமாறு இறைவன் அருளாசி புரிந்தார்.

இந்த நிகழ்ச்சியை தேவாரம் பாடியவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசர் கூறும் போது...

‘நிறைமறைக்காடுதெனில் நீண்டடெரிதீபம் தன்னைக்கறை நிறத்து எலி தன் மூக்குக்சுட்டிடக்கனன்று தூண்ட நிறைகடல் மண்ணும், விண்ணும் நீண்ட வான் உலகமெல்லாம் குறைவறக் கொடுப்பார் போலும் குறுக்கை வீறட்டனாரே!’ என்று குறிப்பிடுகிறார்.

எலியின் தெய்வீகப்பணியில் மனம் மகிழ்ந்த பரமசிவன், எலியை மறுப்பிறவியில் மன்னராக பிறக்கும் படி பேரருள் புரிந்தார்.

சர்வேஸ்வரனிடம் வரம் பெற்ற எலி மறு பிறவியில், அசுர குலத்தில் ‘பலி’ என்ற பெயரில் பிறந்து மன்னராகி கேரளாவை ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சி காலத்தில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். தனது ஆற்றலாலும், தவ வலிமையாலும் பலி மன்னர், தேவர்களை தோற்கடித்தார். மூவுலங்களையும் ஆளும் ஆதிக்கம் பெற்று பலி மகாசக்கரவர்த்தியானார்.

பின்னர் அவர் அசுவமேத யாகம் நடத்தத் தொடங்கினார். இதைப்பார்த்து தேவர்கள் அச்சமுற்று, பகவான் ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்தனர். தேவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், வாமன அவதாரம் எடுத்து பலி முன்தோன்றி மூவடி மண் வேண்டும் என்று தானம் கேட்டார். அதற்கு இசைந்த பலி மன்னன் நீரை வார்த்து தானம் கொடுத்தார்.

தானம் கேட்க வந்திருப்பது பகவான் மதுசூதனன் என்பதை புரிந்து கொண்ட அசுர குரு சுக்ராச்சாரியார் ஒரு வண்டாக மாறி கமண்டல துவாரத்தை அடைத்தார். இதை பார்த்த பகவான் குறுநகை புரிந்தவாறே தர்ப்பையால் கமண்டலத்தின் வாயை குத்தினார். அதனால் சுக்ராச்சாரியார் ஒரு கண்ணை இழக்க நேரிட்டது. பின்னர் வாமனர் திரி விக்ரமனாக வளர்ந்தார்.

ஒரடியால் சத்யலோகத்தை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமனானார். ஈரடியால் மண்ணையும், விண்ணையும் அளந்தார். 3–வது அடியில் பலி மன்னரின் தலையில் தனது பொற்பாதத்தை வைத்து அவரை பாதாள லோகத்தில் அழுத்தி பேரருள் புரிந்தார். அப்போது பலி மன்னர் பரமந்தாமனிடம் ‘பகவானே, நான் மிகப்பெரிய பேறு பெற்றேன். அடியேன் பேறு பெற்ற இத்திருநாளை எல்லா மக்களும் இன்பநாளாக கொண்டாட அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.

அதற்கு பகவானும் அருள் செய்தார். மகாபலி பகவானுக்கு தானம் கொடுத்தது ஆவணி மாதம் திருவோண தினத்தன்று நடந்தது. அன்றைய தினம் மகாபலி மன்னன் தன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக பாதாள லோகத்தில் இருந்து கேரளாவுக்கு வருவதாக ஐதீகம். இதை நினைவு கூறும் வகையிலும், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாபலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ‘அத்தம்’ என்று கூறப்படும் முதல் நாளில் இருந்தே மகாபலி சக்கரவர்த்தியின் வருகைக்காக கேரள மக்கள், வீடுகள் தோறும் வாசலில் கோலமிட்டு வண்ண, வண்ண பூக்களை வட்டமாக அடுக்கி வைத்து அலங்கரித்து மகிழ்வர். அது ‘அத்தப்பூகோலம்’ என்று அழைக்கப்படுகிறது. கேரளா முழுவதும் மகாபலி, விஷ்ணு உருவங்கள் பெரிய அளவில் வரையப்படும்.

10–வது நாளாக திருவோணம் தினம் கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளை அலங்கரித்து வைப்பார்கள். திருவிளக்கேற்றி வழிபடுவார்கள். கும்மியடித்து மகிழ்வர். எல்லா கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

பக்தி பாடல்களை பாடி, பிரார்த்தனை செய்வர். குடும்ப பெரியவர்கள் புத்தாடைகளை வழங்க, அதை குடும்பத்தில் உள்ளவர்கள் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி பெற்று அணிந்து மகிழ்வர். ஓணம் அன்று சிறப்பான உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வார்கள். அன்றைய விருந்தில் அடப்பிரசாதம் என்னும் ஸ்பெஷல் பாயாசம் இடம் பெறும். இளைஞர்கள் வாண வேடிக்கை செய்து மகிழ்வர். அன்று மாலை ‘செண்டை’ என்று அழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேள தாளத்துடன் புலி ஆட்டம், சிங்காரி மேளம், கதகளி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், நீண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.

கேரள மக்கள் எங்கிருந்தாலும் கொண்டாடி மகிழும் பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும். திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். ஓணம் பண்டிகையின் போது மகா விஷ்ணுவை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விஷ்ணு புராணங்களை படிக்கலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை ஒரு பொழுது சாப்பிடலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும்.

திருப்பதியில்  திருவோணம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவோணத்தன்று தீபம் ஏற்றப்படும். இதை சாஸ்ரதீப அலங்கார சேவை என்பர். அன்று ஏழுமாலையானின் உற்சவரான மலையப்பசாமி ஊர்வலமாக 4 மாடங்கள் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு ஆயிரத்தெட்டு திரிகளை கொண்ட நெய் விளக்கு ஏற்றப்படும். அப்போது திருமலையே ஜோதி மயமாக காட்சி தரும்.

திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக