ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 18. சுருதியும் ஸ்மிருதியும்

பகவத்கீதைக்கு அமைந்துள்ள தனிச் சிறப்புக்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் வழங்குகிறது. சுருதி எது, ஸ்மிருதி எது என்று முதலில் ஆராய்வோம். உபநிஷதங்களுக்குச் சுருதி என்று பெயர். கர்ண பரம்பரையாகக் காதால் கேட்டுப் காப்பாற்றி வைக்கப்பட்டது எதுவோ அது சுருதி. நெடுங்காலமாக ஒருவர் பின் ஒருவராகக்கேட்டு வந்தது எனினும் அதன் சொல் அமைப்பை யாரும் மாற்றிவிடவில்லை. ஆகையால் மூலப்பொருளமைப்பும் திரிவுபடாது இருந்து வந்திருக்கிறது. கணிதத்தில் எண்சுவடியையும் பெருக்கல் வாய்ப்பாட்டையும் எப்படி யாரும் மாற்றமுடியாதோ அப்படி சுருதிப்பொருளை யாரும் மாற்ற முடியாது. மெய்ப்பொருளை விளக்குகின்ற சுருதி மொழியும் என்றும் மாறாதிருக்கிறது. ஆக, சுருதி யாண்டும் சாசுவதமானது.
ஸ்மிருதி என்பது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டது என்று பொருள்படுகிறது. சமூகவாழ்க்கை சம்பந்தமான கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் சேர்ந்து ஸ்மிருதி என்னும் பெயர் பெறுகிறது. நன்கு அமைக்கப்பெற்ற ஸ்மிருதிகள் எப்பொழுதும் பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். பராசர ஸ்மிருதி, மனுஸ்மிருதி முதலியவைகள் பிரசித்திபெற்றவைகள். ஸ்மிருதிகள் சாசுவதமானவைகளன்று. காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப அவைகள் மாறியமையும். சமூக நடைமுறைகளை நன்கு அறிந்துள்ள மேலோன் ஒருவன், அல்லது மேலோர் கூட்டம் ஒன்று ஸ்மிருதிகளைக் காலத்துக்கு ஏற்றவாறு திருத்தியமைத்துக் கொள்வதுண்டு. சுதந்தர இந்தியாவுக்கு இப்பொழுது இந்திய அரசாங்கம் அமைத்துள்ள சட்டதிட்டங்களையும் ஸ்மிருதியெனலாம். ஆக, ஸ்மிருதி யென்பது அப்போதைக்கப்போது மாறியமையும் தன்மையுள்ள சமூகக்கோட்பாடுகளாம்.
ஸ்ரீமந் பகவத்கீதையானது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் அமைந்துள்ளது. பரதத்துவத்தை அது நன்கு விளக்குவதால் அது சுருதியாகிறது. பரதத்துவத்துக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது சநாதன தர்மம். இந்நூலினின்று சநாதனதர்மத்தை உள்ளபடி கற்றுக்கொள்ளலாம். சமுதாய அமைப்பு எத்தகையது என்பதையும், அது எங்ஙனம் நடைபெற வேண்டும் என்பதையும் கீதை எடுத்து விளக்குகிறது. சநாதன தர்மம் யுகதர்மமாக வடிவெடுக்கும் விதத்தையும் அது காட்டிக் கொடுக்கிறது. இதை ஒரு உபமானத்தைக் கொண்டு அறிவது நன்று. பொன் என்றைக்கும் விலையுயர்ந்த பொருள் ஆகிறது. பொற்காசு பெறுகிற முத்திரை ஒவ்வொரு அரசாங்கத்திலும் மாறியமைகிறது. பொன் போன்றது சநாதன தர்மம். பொற்காசு போன்றது யுகதர்மம். இனி, ஸ்மிருதியும் பொற்காசுக்குச் சமானமானது. சாஸ்திரப் பிரமாணங்களைச் சொல்ல வருகிற மத ஸ்தாபகர்கள் ஸ்மிருதியும் அங்ஙனம் பகர்கிறது என்று சொல்லுவார்களானால் அவர்கள் குறிப்பிடுவது பகவத்கீதையாகும். ஆசாரியர்களுக்கிடையில் அது ஸ்மிருதி என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. மற்ற ஸ்மிருதிகள் காலத்துக்கு ஏற்றவாறு மாறியமையும். ஆனால் பகவத்கீதையை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் சமூக நடைமுறையிலும் எக்காலத்துக்கும் பொதுவாயுள்ள கோட்பாடுகள் உண்டு. மாறுபாடு அடையும் உலகில் மாறுபாடு அடையாத கோட்பாடுகளையே கீதா சாஸ்திரம் விளக்குகிறது. ஆகவே இது எக்காலத்துக்கும் எல்லா சமூகங்களுக்கும் உதவுகிற ஸ்மிருதியாகும். கீதையைக் கற்றறிந்தவன் பாரமார்த்திகத் தத்துவங்களையும் வியாவகாரிக தத்துவங்களையும் கற்றறிந்தவன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக