ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – கீதையின் போதனை

போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
* பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
* பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
* ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
* அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
* யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை:
அவதூத கீதை, உத்தர கீதை, பிக்ஷú கீதை, அஷ்டாவக்ர கீதை, ராம கீதை, சுருதி கீதை, குரு கீதை, சிவகீதை.

கீதை-ஒரு அறிமுகம் – 26. பொது நூல்


சாஸ்திரம் ஒன்று எல்லார்க்கும் பொதுவாவதற்கு விதிகள் சில உள. அத்தகைய நூல் எந்த மொழியில் அமைந்திருக்கிறது அல்லது எத்தனை மொழிகளில் இயற்றப்பெற்றிருக்கிறது என்பது முக்கியமானதன்று. எத்தனை பிரதிகள் அச்சிடப்பெற்று எத்தனைபேர் கைவசம் அது சேர்ந்துள்ளது என்பதும் முக்கியமல்ல. எத்தனை ஆயிரம் பேர் அல்லது லக்ஷம் பேர் அதை நாள் தோறும் ஓதுகிறார்கள் என்பதும் அந்நூலுக்கு மகத்துவம் கொடுத்துவிடாது. மொழியை முன்னிட்டு மனிதன் மேலோன் ஆகான். பின்பு ஒழுக்கமே மேன்மைக்கு முதற்காரணம். பெரும்பான்மையோர் கையாளுதலைப் பொறுத்தும் ஒரு நூலுக்குச் சிறப்பு வந்துவிடாது. சமாசாரப் பத்திரிகையைப் பெரும்பாலோர் நாள்தோறும் பார்க்கிறார்கள். ஆனால் அதன் மதிப்பு அன்றன்று அகன்று போகிறது. முக்தி நெறியை ஆராய்பவர் சிலரே. அதன்படி ஒழுகுபவர் அதிலும் சிலர். இனி, முக்தியை அடைவது அரிதிலும் அரிது. ஆயினும் முக்தி மார்க்கத்துக்கு என்றைக்கும் எல்லார்க்கிடையிலும் மதிப்பு உண்டு. ஏனென்றால் ஒரு காலம் அல்லாவிட்டால் வேறு ஒரு காலத்தில் எல்லாரும் அவ்வழிக்கு வந்தாகவேண்டும்.
கீதாசாஸ்திரத்தை ஸர்வகத சாஸ்திரம் (யுனிவர்செல் ஸ்கிரிப்சர்) என்றும், பொதுநூல் என்றும் பகருதற்குத் தக்க காரணங்கள் உண்டு. முக்தி மார்க்கத்தைப் புகட்டும் சாஸ்திரங்களே யாவற்றிலும் மேலானவைகள். முக்தி அடைதற்கு நிகரான பேறு மனிதனுக்கு இல்லை. இக்கோட்பாடு யாவர்க்கும் ஒப்ப முடிந்தது. கீதா சாஸ்திரம் முக்தியைப் புகட்டுகிறது. வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி என்பதை அது நன்கு தெளிவுறுத்துகிறது.
வாழ்க்கையின் குறி முக்தி. அதற்கு உற்ற நெறி யோகம். கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களும் முறையே கீதையில் இடம் பெறுகின்றன. இரண்டு சிறகுகளும் ஒரு வாலும் இருந்தால் பறவை பறக்கும். ஜீவன் பரத்தை அடைதற்கு ஞானமும் பக்தியும் சிறகுகளாக அமைகின்றன. கர்மயோகம் சமப்படுத்தும் வால் ஆகிறது. எல்லாச் சாதனங்களும் இம்மூன்றினுள் அடங்கியிருக்கின்றன. பரத்தை எண்ணியெண்ணி இகத்தை மறந்துவிடும்படி புகட்டும் நூல்கள் உண்டு. இகத்தில் கருத்து அனைத்தையும் வைத்து மேலாம் நிலையாகிய பரத்தைப் புறக்கணிக்கும்படி போதிக்கும் புல்லிய நூல்களும் உண்டு. ஆனால் பகவத்கீதையோ இகம் பரம் இரண்டுக்கும் உரிய இடத்தை முறையாக வகுத்து வழங்குகிறது. அவைகளுள் ஒன்று மற்றொருன்றுக்கு முரண்பட்டதன்று என்பது கீதையின் கோட்பாடாகும். இக வாழ்க்கையை நன்கு நடாத்துபவன் பரத்துக்கு உரியவன் ஆகிறான். பரத்தைச் சார்ந்திருக்க வல்லவன் இகத்துக்கு நன்கு பயன்படுகிறான் என்பது கீதையின் போதனையாகிறது.
கர்மத்தை இரண்டு பாங்குடையவைகளாகப் பிரித்து வைப்பவர் உளர். ஒன்றைப் பாரமார்த்திகத்துக்கு உரியது என்றும் மற்றதை இகலோகத்துக்குரியதென்றும் அன்னவர் கருதுகின்றனர். அவ்விரண்டு பிரிவுகளுக்கும் உரிய பதங்களை முறையே வைதிக கர்மம், லௌகிக கர்மம்; (சேக்ரட் அண்டு செக்குலர் ஆக்டிவிடீஸ்) ஆத்ம சாதனம், உலக வியவகாரம்; அருள் நாட்டம், பொருள் இன்பநாட்டம் இப்படியெல்லாம் பகர்கின்றனர். ஆனால் பகவத் கீதையானது வாழ்க்கையை இரண்டாகப் பகுத்து வைக்கிறதில்லை. ஆகையால் மனிதன் புரியும் கர்மத்தை மேலானது என்றும் கீழானது என்றும் அது பாகுபடுத்துவதில்லை. நல்வாழ்க்கை வாழத் தெரிந்துகொண்டவன் ஒருவன் எல்லாக் கர்மங்களையும் ஆத்ம சாதனத்துக்குரியவைகளாக்கலாம். நல்வாழ்க்கை வாழத் தெரியாதவன் ஒருவன் கடவுள் வழிபாடு போன்ற மேலாம் கர்மத்தைக் கெடுத்து பந்தபாசத்துக்குரிய தாக்கிவிடலாம். வினைகளை யெல்லாம் மேலாம் வினைகளாக மாற்றக் கற்றுக்கொடுப்பது பகவத்கீதை. இக்கோட்பாடு இந்த நூலின் தனிச்சிறப்பு ஆகும்.
மன அமைப்பில் செயல், உணர்வு, அறிவு என்று மூன்று பகுதிகள் உண்டு. நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர் அவைகளை முறையே (வில், எமோசன், காக்னிஷன்) என்று பகர்வர். அன்னை பராசக்தியே மாந்தர் உள்ளத்தில் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஸ்வரூபிணியாக எழுந்தருளியுள்ளாள் என்பது கோட்பாடு. மனதில் இந்த மூன்றுவித மாண்புகளும் ஒருங்கே மிளிருதல் வேண்டும். அப்பொழுதுதான் பண்பாடு பூர்த்தியாகிறது. மனிதன் திண்ணியன் ஆவதற்கும் அதுவே உற்ற உபாயம். நல்ல உள்ளத்துக்குரிய மூன்று மாண்புகளையும் கீதா சாஸ்திரம் முறையே இயம்புவதால் அது எல்லார்க்கும் பொது நூலாகும்.
மனிதனை நிறைமனிதன் ஆக்குவது கீதையின் கோட்பாடாகும். உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் நிறைநிலைக்கு இன்றியமையாத உறுப்புகளாகும். பேராற்றல் படைத்திருப்பது முதல் கோட்பாடு. ஒழுக்கம் ஆற்றலில் அடங்கி விடுகிறது. நலத்தைச் செய்யும் செய்விக்கவும் ஆற்றல் உடையவனுக்கே சாலும். அடுத்த கோட்பாடாவது அன்பு. உயிர்கள் அனைத்துக்கும் அது பொதுவானது. அன்பைத் தூய அன்பாக மாற்றியமைப்பது பக்தியோகத்தின் நோக்கமாகும். தூய அன்பினின்று இனிமை யாவும் தோன்றும். எல்லாவற்றையும் ஒன்றுபடுத்துவது தூய அன்பு. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தூய அன்பு படைத்திருப்பவனுக்குச் சொந்தமாய்விடுகின்றன. இனி, அறிவு மூன்றாவது கோட்பாடு ஆகும். பட்டப்பகலை உண்டு பண்ணும் ஞாயிறு போன்றது அறிவு; அனைத்தையும் அது விளக்குகிறது. மாண்புகளையெல்லாம் அது எடுத்துக்காட்டவல்லது. உயிர்களைச் செயலில் ஏவுவதும் அறிவு. தொடுத்த கர்மத்தைக் குற்றம் குறையின்றிச் செய்து முடிப்பதற்கு வழிகாட்டுவதும் அறிவு. அதைப் பாங்குடன் வளர்க்க மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். ஆக, ஆற்றலையும் அன்பையும் அறிவையும் ஒருங்கே அடையப்பெற்றிருப்பவனுக்கு மேலும் பெறவேண்டிய பேறு ஒன்றுமில்லை. அவன் நிறைமனிதன் ஆகிறான். அவனுக்கே நிறை நிலை சொந்தம். நிறைநிலையெய்தி நிறைமனிதன் ஆக விரும்புபவர் அனைவர்க்கும் ஸ்ரீமத் பகவத்கீதை பொது நூலாகும். சமயங்கள் அனைத்துக்கும் அதைப் பொது நூலாக வைத்துக்கொள்வதும் சாத்தியமாகிறது.

கீதை-ஒரு அறிமுகம் – 25. சொரூப லக்ஷணம்

பரம்பொருள் மனம் மொழிக்கு எட்டாதது. அது பிரபஞ்ச மயமாக வடிவெடுக்குமிடத்து அதை ஸத் சித் ஆனந்தம் என்று சொல்லலாம். சொல்லற்கரிய பொருளை ஒரு சொல்லால் விளக்குமிடத்து ஸச்சிதானந்தம் என்பதற்கு நிகரான சொல் வேறு ஒன்றுமில்லை. ஸத் என்னும் சொல் உள்ளது எனப் பொருள்படுகிறது. ஸத்தியம் அல்லது உண்மை அதனிடத்திருந்து வருகிறது. காலத்தால், இடத்தால், செயலால் மாறுபடாதிருப்பது ஸத். காலதேச வர்த்தமானதைக் கடந்திருப்பது பரம்பொருள். அதே ஸத் பொருள் காலத்திலும், இடத்திலும், செயலிலும் தன்னை விளக்கிக் கொண்டிருக்கும்போது எண்ணிறந்த ஜீவகோடிகளாகக் காட்சி கொடுக்கிறது. ஜீவாத்மா தோற்றத்துக்கு வந்துள்ள நிலைமையில் கர்மமும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். சூரியனிடத்து வெப்பமும் வெளிச்சமும் இருப்பது போன்று ஜீவாத்மாவிடம் கர்மமுண்டு. ஆகவே, பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஜீவதத்துவத்தையும் கர்மயோக தத்துவத்தையும் சேர்த்தே புகட்டிக்கொண்டு போகின்றன. ஆறாவது அத்தியாயத்தில் உள்ள தியானம் அல்லது எண்ணம் சூக்ஷ்மமான கர்மமாகிறது.
இனி, கர்மத்துக்கு அடிப்படையாயிருப்பது சங்கற்பம் அல்லது தீர்மானம். ஆங்கிலத்தில் அதை (வில்) என்று அழைக்கிறோம். கிரியா சக்தி என்பது பரிபாஷையில் அதற்கு அமைந்துள்ள பெயராகும். எல்லாக் கர்மங்களும் வில் அல்லது சங்கற்பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நடமாட, உண்ண, உறங்க, எழுந்திருக்க மனிதன் முதலில் சங்கற்பிக்கிறான். பிறகு அங்ஙனம் கர்மம் செய்கிறான். சிருஷ்டி முழுதும் சங்கற்பத்திலிருந்து வந்தது. நேராகவோ மறைமுகமாகவோ எல்லா சங்கற்பங்களும் முடிவில் ஒரு சங்கற்பமாய் வடிவெடுக்கின்றது. (வில் டு லைவ்) வாழ விரும்புதல்தான் முடிந்த சங்கற்பம். ஜீவர்கள் எக்கர்மத்தைச் செய்தாலும் அதன் மூலம் வாழ்ந்து நிலைத்திருத்தல் என்பதை நிலைநாட்ட முயலுகின்றனர். அதாவது தங்களது யதார்த்த சொரூபமாகிய ஸத் சொரூபத்தை நிலைநாட்டவே ஜீவகோடிகள் கர்மம் புரிகின்றனர். (காட் இஸ் லைஃப்) என்பது கோட்பாடு ஆத்மாவானது உயிருக்கு உயிர் என்பது அதன் கருத்து. உயிர்களின் நடைமுறை அனைத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். ஆக, கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஸத்சொரூபத்தை விளக்குதற்கான சாஸ்திரமாகும்.
யந்திரங்கள் கர்மம் செய்கின்றன; உயிர்கள் கர்மம் செய்கின்றன-இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசம் யாது? யந்திரங்களிடத்து உணர்ச்சியில்லை; உயிர்களிடத்து உணர்ச்சியுண்டு. உணர்ச்சியும் உயிர்வாழ்க்கையும் இணைபிரியாதவைகள். உணர்ச்சி விதவிதமான வடிவெடுக்கிறது. விருப்பு வெறுப்பு, நட்பு பகை, ஆசை சினம், பொறை பொறாமை, பாராட்டுதல் புறக்கணித்தல் ஆகிய இவையாவும் உணர்ச்சியின் வெவ்வேறு தோற்றங்களாம். விருப்பு, நட்பு, ஆசை, பொறை போன்றவை உடன்பாடான உணர்ச்சிகள். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறையான உணர்ச்சிகள். உடன்பாட்டு உணர்ச்சிகள் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. எதிர்மறை உணர்ச்சிகள் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. இவ்வுணர்ச்சிகள் ஆங்கிலத்தில் (எமோசன்) என்னும் பெயர் பெறுகின்றன. உணர்ச்சியைப் பயன்படுத்துமளவு மனிதன் மேலோன் ஆகிறான்.
பகவத்கீதையில் ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரையில் கடவுள் சொரூபத்தை விளக்குவதோடு பக்தியையும் அப்பகுதி வளர்க்கிறது. தூய உணர்ச்சியின் திரள் பக்தி என்னும் பெயர் பெறுகிறது. கேடுடைய உணர்ச்சிகளெல்லாம் பக்தியில் நலம் வாய்ந்த உணர்ச்சிகளாக மாறுகின்றன. கடவுளுடைய மகிமை விளங்குமளவு அவனிடத்து அன்பு அல்லது பக்தி ஊற்றெடுக்கிறது. ஊசியானது காந்தத்தினிடம் கவரப்படுவது போன்று அன்புடைய உயிர் தெய்வத்தினிடம் கவரப்படுகிறது. (காட் இஸ் லவ்) என்பது கோட்பாடு. அன்பே கடவுள் என்பது அதன் கருத்து. அன்பு என்னும் கவர்ச்சி ஓங்குதற்கு ஏற்ப இனிமை மிளிர்கிறது. அது ஆனந்தமாகப் பரிணமிக்கிறது. ஆனந்தம் வளர வளர அது உலப்பில்லா ஆனந்தமாகிறது. ஆனந்தமே பிரம்மம். பரமாத்மாவின் சொரூபம் ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாடியே உயிர்கள் வாழ்க்கையில் பற்றுவைக்கின்றன. ஆனந்தம் இல்லாவிட்டால் உயிர்கள் கணப்பொழுதும் வாழ்ந்திருக்கமாட்டா. ஆக, ஆனந்தம் என்னும் ஆத்மசொரூபத்தை வளர்ப்பது கீதையின் இரண்டாவது ஷட்கத்தின் நோக்கமாகும்.
ஜடப்பொருள் ஒன்று இருக்கிறது. சேதனப்பொருள் ஒன்று இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்று அறியவேண்டும். இருக்கிறேன் என்ற அறிவு சேதனப்பொருளுக்கு உண்டு; அந்த அறிவு ஜடத்துக்கு இல்லை. உயிர்களிடத்து உணர்வு இருப்பது போன்று அறிவு இருக்கிறது. சூரியன் இருப்பதை சூரியப்பிரகாசம் காட்டுகிறது. வேறு வெளிச்சத்தின்துணை கொண்டு சூரியனை நாம் அறிவதில்லை. ஜீவன் உயிரோடிருக்கிறான் என்பதற்கு அவனுடைய அறிவே பிரமாணம். ஒவ்வொரு உயிரும் தன்னைத்தான் அறிந்து கொண்டிருக்கிறது. இங்ஙனம் அறியும் தன்மையை ஆங்கிலத்தில் (காக்னிஷன்) என்கிறோம். அறியும் தன்மையில் ஏற்றத் தாழ்வு உண்டு. பேருயிர்கள் நன்கு அறிகின்றன. சிற்றுயிர்கள் மங்கிய அறிவு படைத்திருக்கின்றன. ஆயினும் அறிவு இல்லாத உயிர் இல்லை. அறிவை வளர்ப்பது வாழ்வின் நோக்கம்.
உணர்வுக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்வு உண்டு. இரும்பை உருக்கினால் அது இளகுகிறது; அத்துடன் ஒளிர்கிறது. இளகும் தன்மை உணர்வுக்கு ஒப்பானது; ஒளிவிடும் தன்மை அறிவுக்கு ஒப்பானது. இந்தச் சான்று ஜடப்பொருளிடத்திருந்து வருகிறது. சேதனப் பொருளாகிய ஜீவாத்மனிடத்து அன்பும் அறிவும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. இருநண்பர் ஒருவரையொருவர் நேசிக்குமளவு ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கின்றனர்; ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுமளவு நேசிக்கின்றனர். கடவுள்பால் அன்பு கொள்ளுமளவு பக்தன் கடவுளை அறிகிறான். அவரை அறியுமளவு அவனுக்குப் பக்தி அதிகரிக்கிறது. இக்கோட்பாட்டை வாழ்க்கையில் எல்லாப் படித்தரங்களிலும் காணலாம்.
அறிவு, ஞானம், சேதனம், பிரக்ஞை இவையாவும் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள். ஞானத்தை வளர்ப்பதற்கான வழிகளை பகவத்கீதையில் பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாவது அத்தியாயம் வரையில் காணலாம். எரியும் விளக்கு ஒன்று அதிகம் சுடர்விடுமானால் அது தன்னையும் தன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களையும் நன்றாக விளக்கிக்காட்டும். அந்த விளக்கைக் காத்துவரும் கண்ணாடிக் கூண்டு ஒன்று இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அழுக்குப்படிந்த கண்ணாடியில் வெளிச்சம் அதிகமாக வெளியே வராது. கண்ணாடியைத் துடைத்துத் தூயதாக்குமளவு வெளிச்சம் தடைபடாது ஒளிரும். அந்தக்கரண சுத்தி பண்ணுவதற்கான வழிகள் ஞான வாழ்க்கையில் காட்டப்பட்டிருக்கின்றன. ஜடம்போன்று தென்படும் ஜீவனை ஞானநெறி சித்சொரூபமாகத் திருத்தியமைக்கிறது. (காட் ஈஸ் லைட்) என்பது கோட்பாடு. ஆத்மா ஜோதிர் மயம் என்பது அதன் பொருள். இங்ஙனம் ஸத் சித் ஆனந்தமாகிய பர சொரூபத்தின்கண் ஜீவனை எடுத்துச் செல்லுதல் பகவத்கீதையின் திட்டமாகும்.

கீதை-ஒரு அறிமுகம் – 24. கிருஷ்ணனது பான்மை

சுருதி என்று சொல்லப்படும் வேதாந்த சாஸ்திரம் கிருஷ்ணனை விளக்க முயலுகிறது. கிருஷ்ணன் என்பதும் பரமாத்மா என்பதும் ஒன்றே. ஒரு தேகத்துக்குள் கட்டுப்பட்டவன்போன்று அவன் தென்படுகிறான். உடைக்குள் கட்டுப்பட்டதுபோன்று நமது உடல் தென்படலாம். ஆனால் உடையிருப்பதாலும் போவதாலும் உடலுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. கண்ணன் காயத்தோடு அங்ஙனம் சம்பந்தப்பட்டவன் போன்று இருந்தான். லோக ஹிதத்தின் பொருட்டு உடல் என்னும் அங்கியை அவன் விளையாட்டுக்காக அணிந்தவன் ஆகிறான். அவன் துவைதியுமல்லன், விசிஷ்டாத்வைதியுமல்லன், அத்வைதியுமல்லன். இம் மூன்று சம்பிரதாயங்களும் அவனுக்குச் சேவை புரிகின்றன. அவனைக் காணவும், உணரவும், இணக்கம் கொள்ளவும் அம் மூன்று மதங்களும் தம்தம் போக்கில் முயலுகின்றன. மூன்று மதங்களையும் அவன் தன்னகத்து அடக்கியிருக்கின்றான்; பிறகு அவைகளுக்கு அப்பாலுமிருக்கிறான்.
நீ அத்வைதியாயிரு, விசிஷ்டாத்வைதியாயிரு, துவைதியாயிரு என்றெல்லாம் கீதை புகட்டுவதில்லை. ஆத்மபோதம் அடையப்பெற்றவன் ஆவாயாக. உனது பேரியல்பில் நிலைபெற்றிரு. பேராற்றல் படைத்துள்ள நீ கரவாது உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இந்தப் பூலோகத்துக்கு வந்துள்ளவனல்லன். உலகுக்கும் உனக்கும் தொடர்வுண்டு. அதை நிலைநாட்டுவது யோகம். தூக்கி வினைசெய்து அத்தொடர்வை நிரூபிப்பாயாக. ஆத்ம சொரூபத்தில் அனைத்தையும் அடக்கிக்கொள்வாயாக. மலரானது மணம் வீசுவது போன்று உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும். ஒளிவீடும் ஞாயிறு போன்று உன் அறிவு ஓங்கியிருப்பதாகுக. பிறகு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மதங்கள் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம சொரூபத்தில் பெறுகின்றன. இங்ஙனம் யோகேசுவரன் உயிர்களை யோகிகள் ஆகும்படி தூண்டுகிறான்.
ஓரளவில் கண்ணன் காட்டிய வழியையே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பின்பற்றுகிறார். அவர் சமயங்களின் உயர்வு தாழ்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய சம்பிர தாயங்களைப் பற்றியும் அவர் நினைக்கவில்லை. வாழ்வு எவ்வளவு சீரிய வாழ்வாகவேண்டும் என்பதிலேயே அவர் கருத்தைச் செலுத்தினார். அருள் தாகம் பிடித்து அவர் அலைந்து திரிந்தார். உடலைக்கொண்டு அவர் உழைத்ததெல்லாம் தெய்வ வழிபாட்டிற்கென்றே; உள்ளத்தில் அவருக்கு எழுந்த உணர்ச்சி யெல்லாம் இறைவனைப்பற்றியதே. அவருடைய தூய தெய்வீக அன்புக்கு இலக்காகாதது ஒன்றுமில்லை. தெய்வத்தைத் தவிர வேறு எந்த உறவையோ, இணக்கத்தையோ அவர் அறிந்திலார். தெய்வ அருள் ஒன்றே அவர் பெற்ற பேறு. இங்ஙனம் கீதையின் கோட்பாடே வடிவெடுத்தவராய் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்ந்துவந்தார். ஆனால் அவர் கீதையையோ வேறு எந்த சாஸ்திரத்தையோ கற்றது கிடையாது. புத்தகப் படிப்புக்கும் அவருக்கும் வெகுதூரம். பெருவாழ்வினின்று அவர் பெற்ற அனுபவங்களையே அவர் மற்றவர்களுக்குப் பகர்ந்தருளினார். அவருடைய உபதேசங்கள் எங்கெல்லாம் கீதைக்கு ஒத்திருக்கின்றனவோ ஆங்கெல்லாம் அவைகளை நமக்கு எட்டியவளவு கீதையுடன் இணைத்து அமைத்துள்ளோம். அத் துறையில் நாம் செய்துள்ள முயற்சி மிகக் குறைந்தது. அதை இன்னும் விரித்தும் திருத்தியும் அமைக்கலாம் என்பதை வினய பூர்வமான மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆக, எந்த சமயத்தையோ சம்பிரதாயத்தையோ நிலைநாட்டுதற்கு என்று அல்லாது, யோக சாஸ்திரம் என்கிற முறையில் ஸ்ரீமத் பகவத் கீதையை விளக்க ஈண்டு முயன்றுள்ளோம்.

கீதை-ஒரு அறிமுகம் – 23. வேதாந்தம்

பிரஸ்தானத்திரயம் புகட்டுகின்ற கோட்பாடுகளையெல்லாம் தொகுத்து வேதாந்தம் என்று சொல்லுவது முறை. வேதத்தினுடைய அந்தம் அல்லது முடிவு வேதாந்தம் என்பதாகிறது. இம்மை என்று சொல்லப்படும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும், மறுமை என்று சொல்லப்படும் சுவர்க்கம் முதலிய மறு உலக வாழ்க்கையைப் பற்றியும் பகர்வது வேதம். வேறு ஒரு விதத்தில் அதே கோட்பாட்டைப் பகர்வோமானால் இந்திரியங்கள் மூலம் நுகரப்பரடுகின்ற பிரபஞ்ச வாழ்க்கையைப்பற்றி பேசுவது வேதம். இந்திரியங்களுக்கும் மனதுக்கும் அப்பால் உள்ள பரத்தைப் பற்றிப் புகட்டுவது வேதாந்தம். இந்திரிய வாழ்க்கையைத் தியாகம் செய்தாலொழிய பரம் என்னும் பெருநிலை சித்திக்காது.
இந்தியாவிலும் புற நாடுகளிலும் தோன்றியுள்ள எல்லா மதங்களின் அடிப்படைத் தத்துவங்களை வேதாந்தத்தில் காணலாம். வேதாந்தத்தில் இல்லாத கோட்பாடு உலகில் எந்த மதத்திலுமே இல்லையென்று உறுதி கூறலாம். ஆக, மதங்களுக்கெல்லாம் தாய். மதமாயிருப்பது வேதாந்தம். மெய்ப்பொருளுக்குப் பல பெயர் இட்டு அழைப்பதை வேதாந்தம் ஆமோதிக்கிறது. பெயரையும் விளக்கத்தையும் முன்னிட்டுச் சமயங்கள் பெரிதும் சண்டையிட்டுக்கொள்கின்றன. அடிப்படையாயுள்ள கோட்பாட்டைக் காணுமாறு தூண்டுவது வேதாந்தம். தாகத்தைத் தணிப்பது ஜலமா, தண்ணீரா, பானியா, வெள்ளமா என்று வாதாடாதே. ஜலம், தண்ணீர், பானி, வெள்ளம் என்ற சொற்கள் குறிக்கும் பொருள் யாது என்று ஆராய்ந்து பார். பின்பு வேற்றுமையும் வீண் விவாதமும் ஒடுங்கும். மனிதன் அடையும் மேலாம் நிலையை ஐயம் திரிபு இன்றி விளக்குவது வேதாந்தம்.
இனி துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களின் உட்கருத்தைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். நமக்குப் புலப்படுவது இவ்வுலகம் அல்லது ஜகத் என்பதாம். இதில வாழ்ந்திருக்கும் உயிர்களுக்கு ஜீவர்கள் என்று பெயர். ஜகத்தையும், ஜீவர்களையும் தாங்கியிருக்கும் பெரிய பொருளுக்குப் பரம் என்று பெயர். அது பேரறிவும் பேராற்றலும் படைத்துள்ளது. உலகனைத்தையும், உயிர்கள் யாவையும் அது யாண்டும் ஆண்டுவருகிறது. ஜகத்தில் கட்டுண்டு கிடக்கும் ஜீவர்கள் எண்ணிறந்த பிறவிகளை எடுக்கின்றனர். பிறவிகள் வாயிலாக அவைகள் மேலான நிலைக்குப் போவதும் உண்டு; கீழான நிலைக்கு இறங்குவதும் உண்டு. புண்ணியம் மேல்நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது; பாபம் கீழ்மையில் ஆழ்த்துகிறது. பரம் அல்லது ஈசுவரனைச் சார்ந்திருந்து ஜகத்தினின்று ஜீவன் விடுதலையடைவது முக்தி. எல்லா உயிர்களும் முக்தி யடையவேண்டும். இக்கோட்பாடு துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் சம்மதம். இனி, மூன்று மதங்களின் தனியியல்புகளை ஆராய்வோம்.
துவைத மதத்தின்படி ஜகத், ஜீவன், பரம் ஆகிய மூன்றும் அனுதியானவைகள். அவைகளுக்கு முடிவும் இல்லை, துவக்கமும் இல்லை, பரம்பொருள் ஜகத்தையும் ஜீவர்களையும் ஆளுகின்றார். ஆனால் ஜகத்தும் ஜீவனும் யாண்டும் பரத்துக்கு வேறு ஆனவைகள். ஜீவனானது அவருடைய கருணையால் ஜகத்திலிருந்து விடுதலையடைந்து அவருக்குத் தொண்டனாய் ஆட்படுவது முக்தி. முக்தியிலும் பரம் வேறு, ஜீவன் வேறு.
விசிஷ்டாத்வைதம் என்பது ஒரு விசேஷத்தோடு கூடிய அத்வைதம். கடவுள் ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு உடலாயிருப்பது ஜகத். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த் தத்துவங்களாயிருப்பது ஜீவன். சூரியனிடத்திருந்து கிரணங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை தோன்றி வருவதுபோன்று ஜீவர்கள் பரமாத்மாவின் கிரணங்கள் ஆகின்றனர். பரமாத்மாவைப் பூரணனென்றும் அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் சுவானு பவத்தில் அறிந்துகொள்ளுதல் முக்தி. அதற்கு ஜீவன் தன்னைப் பரமாத்மாவிடத்துப் பிரபத்தி பண்ணவேண்டும். பிரபத்தி என்பதும், சரணாகதி என்பதும், அடைக்கலம் என்பதும் ஒரே கருத்தைக் குறிக்கும் பல சொற்களாம். அவர் அருளால் ஜீவன் தன்னை அவருடைய ஓர் அவயவம் என்று அறிந்திருப்பது முக்தி.
அத்வைதம் என்பது இரண்டற்றது எனப் பொருள்படுகிறது. ஜகத் ஜீவன் என்று சொல்லப்படுபவை வேறு, பரம் வேறு அல்ல; உள்ளது ஒரே பொருள். அது அகண்ட சத் சித் ஆனந்தம். தன்னை ஜகத் ஆகவும் ஜீவனாகவும் காட்டிக்கொள்ளுகிற வல்லமை அதனிடத்து உண்டு. அந்த வல்லமைக்கு அதனுடைய மாயா சக்தி என்று பெயர். பிரம்மமும் பிரமத்தினுடைய சக்தியும் இரண்டல்ல. அத்வைதம் என்பதற்கு இரண்டல்ல என்பது பொருள். ஜீவனிடத்துள்ள அக்ஞானத்தால் ஜகத் என்றும் ஜீவன் என்றும் பேதம் அவனுக்குத் தோன்றுகிறது. பிரம்ம ஞானத்தில் பிரம்மம் ஒன்றே யாண்டும் உளது. நதி கடலில் லயமாவது போன்று ஞானமடைந்த ஜீவன் பரத்தில் கலக்கிறான். இது அத்வைதம் புகட்டும் முக்தி. அதை இன்னும் நன்றாகத் தெளிவுபடுத்துமிடத்து, கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருக்கும் அலையானது, தனது நாம ரூபத்தை அழித்துவிடும்பொழுது பழையபடி கடலாகிவிடுகிறது. அப்படி முக்தி நிலையில் ஜீவன் பரத்தில் ஒன்றுபடுகிறான்.
சாஸ்திரங்களில் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளுக்கும் இடம் உண்டு. மனிதனுடைய வாழ்க்கையிலேயே இம் மூன்று நிலைகளும் பொருந்திய ஸ்நானங்களைப் பெறுகின்றன. மனிதன் விழித்திருந்து வியவகாரம் பண்ணுகிறான். அது துவைத நிலை. ஆங்குத் தான் வேறு; மற்ற உயிர்கள் வேறு; உலகம் வேறு. பிறகு சொப்பனம் காண்கிறான். சொப்பனத்தில் தென்படும் மனிதர்களும் உலகமும் அவனுடைய மனத்துக்கு அன்னியமானவைகளல்ல. பேதம் போன்று தென்பட்டுக்கொண்டிருக்கும் அபேதநிலை அது. விசிஷ்டாத்வைத நிலையை இது நன்கு விளக்குகிறது. பிறகு சொப்பனமில்லாத அயர்ந்த உறக்கம் வருகிறது. அதில் பிரக்ஞை ஒன்றைத் தவிர பாக்கியெல்லாம் போய்விடுகின்றன. எல்லா அவஸ்தைகளுக்கும் பொதுவாகிய பிரக்ஞை யொன்றே அங்கு மிச்சம். அது அத்வைத நிலையாகும். இந்த மூன்று நிலைகளும் அக்ஞானத்தில் இருப்பது போன்று ஞானத்திலும் வந்து அமைக்கூடியவைகள். இவைகளில் எது பெரியது, எது சிறியது, எது சாதனம், எது சாத்தியம் என்று மதவாதிகள் விரிவாகவும் விதவிதமாகவும் பேசி வருகிறார்கள்.

கீதை-ஒரு அறிமுகம் – 22. பாஷ்யங்களின் பாகுபாடுகள்

பாஷ்யங்கள் பல இருப்பதால் அவைகளுள் முரண்பாடு உண்டாவது இயல்பு. மாறுபடுகின்ற கருத்துக்களையெல்லாம் மேலானவைகளாக அங்கீகரிப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழலாம். மாறுபாடுகளுக்கிடையில் ஒற்றுமை பல அமைந்தாகவேண்டும். பகவத்கீதையை ஒரு நிலைக்கண்ணாடி என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பாஷியமும் அதில் தோன்றும் பிம்பம் போன்றதாகும். அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும் தென்படுகிறது. கண்ணாடியில் தோன்றுவது என்பது அனைத்துக்கும் பொதுவானது. அங்ஙனம் ஒவ்வொரு கொள்கைக்கும் மூலக்கருத்து கீதையில் இருக்கவேண்டும். மூலக்கருத்து கீதையில் இல்லாவிட்டால் வியாக்யானம் வைதிகத்துக்கு ஒவ்வாததாய்விடும். வைதிகத்துக்கு ஒத்ததாய் இருந்துகொண்டே விரிவுரைகள் பலவாக வடிவெடுப்பதுதான் முறை. ஒருவர் கீதையை முற்றும் பக்திநூல் என்று பகரலாம். இன்னொருவர் அதை ஞானமார்க்கம் என்று நவிலலாம். மற்றொருவர் அதை யோசாஸ்திரம் என்றே எடுத்துக்காட்டலாம். இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம் வெறும் பெயரளவில் என்று ஒருவர் நிரூபிக்கலாம். பரத்தைப்பற்றிப் பேசவேண்டியது அவசியமில்லை; சொற்பதங் கடந்த பொருளைப் பற்றிப் பேச்சு எதற்காக? கீதை பகர்வதெல்லாம் பாரமார்த்திகத்தை அடிப்படையாகக்கொண்ட சீரிய சமுதாய வாழ்க்கையே என்று ஒருவர் எடுத்தோதலாம். அரசியல் தத்துவம் அதில் ஏராளமாய் இருக்கிறது என்று ஒருவர் பொருள்படுத்தலாம். அங்ஙனமே ராணுவ தத்துவம் அதில் பொதிந்து கிடக்கிறது என்று இன்னொருவர் இயம்பலாம். இப்படியெல்லாம் வியாக்யானம் செய்தவர்கள் சிறுபான்மையோர்.
பாஷ்யக்காரர்களில் பெரும்பான்மையோர் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று மதங்களில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவர்களாயிருந்து வருகின்றனர். அவர்களுடைய மனப்பான்மையும் அதற்கேற்றவாறு மாறியமைகிறது. கீதா தத்துவத்துக்கு அவர்கள் பொருள் தருவதும் அவரவர் மனப்பான்மைக்கு ஏற்றபடி மாறியமைந்து வருகிறது. இனி, அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லார்க்கும் அதில் ஒரே விதமான நம்பிக்கையிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவர்களது கொள்கையில் உட்பிரிவுகள் ஏராளமாயிருக்கின்றன. எது அத்வைதம் என்பதை அத்வைதிகளே விதவிதமாக விளக்குவார்கள். அதேபாங்கில்தான் விசிஷ்டாத்வைதமும் அமைந்துள்ளது. விசிஷ்டாத்வைதம் என்னும் எல்லைக்குள் இருப்பவர்களுள் கருத்துவேற்றுகளைக் காணலாம். மற்று துவைத மதத்திலும் உட்பிரிவுகளை ஏராளமாகக் காணலாம். அவரவர் கோட்பாட்டைப் பரப்புதற்கென்றே ஒவ்வொருவரும் பாஷ்யம் எழுத முன்வந்தார். அத்வைத சம்பிரதாயத்துக்குச் சிறந்த முன்மாதிரியாயிருப்பவர் ஸ்ரீசங்கராச்சாரியர் ஆவார். விசிஷ்டாத்வைதிகள் அனைவர்க்கும் பிரதிநிதியாயிருப்பவர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியர். துவைத மதவாதிகள் எல்லார்க்கும் முன்னணியில் இருப்பவர் ஸ்ரீ மத்வாச் சாரியர். பகவத்கீதைக்கு இம்மூவரும் பாஷ்யங்கள் இயற்றியிருக்கின்றனர். இம்மூவரும் தென்னிந்தியாவில் தோன்றியவர்கள் என்பதும் கருத்தில் வைக்கவேண்டிய விஷயமாகும். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதத்தை அல்லது மதங்களைத்தாக்குவதையும் பாஷ்யங்களில் காணலாம். தத்துவ ஆராய்ச்சி என்ற முறையில் ஒரு கோட்பாட்டைத் தகர்த்தல் நியாயமே. ஆனால் அதில் வரம்பு கடந்து போவது யாருக்குமே பொருந்தாது. அச் செயலில் சில பாஷ்யக்காரர் வரம்பு கடந்தும் போயிருக்கின்றனர்.

கீதை-ஒரு அறிமுகம் – 21. சிறந்த பாஷ்யம் எது?

நூற்றுக்கணக்கான விரிவுரைகள் கீதைக்கு வந்திருக்கின்றன வென்றால் அவைகளில் எதை ஏற்பது, எதை விலக்குவது, எதைக் கற்பது, எதைத் தள்ளுவது என்ற கேள்விகள் எழலாம். சூரியோதயத்தின் அழகை ஒவ்வொரு கலைஞானியும் தன் தன் துறையில் வைத்து சிலாகித்துப் பேசலாம். வானநூல் துறை, மருத்துவ நூல் துறை, இயற்கையழகுத் துறை, கணித நூல் துறை, ஜோதிட நூல் துறை, பருவ விளக்கத்துறை, உயிர் தத்துவத் துறை இன்னும் என்னென்னவோ துறைகளினின்று உதய சூரியனை வர்ணிக்கலாம். அத்தனைவித வர்ணனைகளுக்கும் ஞாயிறு இடங்கொடுக்கும். கீதாசாஸ்திரமும் எண்ணிறந்த சம்பிரதாயங்களை விளக்குதற்கு ஆதரவாகும். அத்தனை விதமான விளக்கங்களையும் அது தன்னகத்து அடக்கிக்கொண்டிருக்கிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக கீதைக்கென்றே அமைந்துள்ள வியாக்கியானம் ஒன்று உளது. ஒருவிதத்தில் கீதையைவிட அது சிறந்தது. ஸ்ரீ கிருஷ்ணபகவான் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு ஒப்பற்ற விளக்கமாகிறது. அவதார புருஷர் ஒருவர் தமது ஜீவிதத்தின் மூலம் புகட்டுவது தான் முதன்மை பெறுகிறது. அவர் பகர்ந்தருள்வது அதற்கு அடுத்தபடியாக வருகிறது. அவதார புருஷருடைய பேச்சுக்கே அருளையும் பொருளையும் தருவது அந்த அவதார புருஷருடைய ஜீவிதம். இக்கோட்பாடு வாசுதேவரது வாழ்க்கையில் உச்ச நிலையைப் பெற்று விளங்குகிறது. மனத்தகத்திருந்து கச்மலத்தைக் களைந்து விடு என்று அவர் புகட்டினார். சூரியனிடத்து எப்படி இருள் இருக்க இடமில்லையோ அப்படி அச்யுதனிடத்துக் கீழ்மை குடிகொள்ள இடமில்லை. ஆற்றல் படைத்தவனாய் எழுந்திராய் என்று இயம்பினார் அவர். பின்பு, ஆற்றல்கள் அனைத்துக்கும் அவரே இருப்பிடமாய் இலங்கினார். உயிர்களிடத்து அன்பு பூண்டு ஒழுகுக என்று அவர் உபதேசித்தார். தாமே அன்பின் வடிவினராய் நன்கு மிளிர்ந்திருந்தார். நலத்தை நிலைநாட்டும் வீரன் ஒருவனுக்கு உற்றார் என்றும் வேற்றார் என்றும் வேற்றுமையில்லையென்று அவர் எடுத்தோதினார். கோவிந்தனது பாங்கும் அங்ஙனமே இருந்தது. இயற்கை கர்மமே வடிவெடுத்தது. அதற்கு ஆதாரமாயிருக்கும் ஆத்மாவின்கண் கர்மமில்லை என்பது கண்ணன் போதனை. கண்ணனாக வடிவெடுத்திருந்த சரீரம் கர்மவீரனாக வினையாற்றியது. மஹாபாரதத்தில் கூடியிருந்த பாத்திரங்கள் எல்லாரும் ஒன்றுகூடிக் கண்ணன் செய்த கர்மத்தில் கால்பங்கு செய்யவில்லை. சரீரம் அவ்வளவு வேலை செய்துகொண்டிருந்ததற்கு இடையில் கிருஷ்ண பரமாத்மா என்றைக்கும் பரமாத்ம சொரூபமாகவே இருந்தார். மற்ற உயிர்கள் போன்று அவர் அழக்கிடையாது; ஏமாற்றம் அடையக்கிடையாது; வியப்படையக்கிடையாது; கவலைப்படக் கிடையாது; துயருறக் கிடையாது. யாண்டும் நிறைநிலையிலேயே இருந்தார். கண்ணனை அறிபவர் கீதையை அறிவார்கள். கண்ணனே கீதைக்குச் சிறந்த பாஷ்யம்.