சனி, 11 ஜூன், 2016

கர்ம யோகத்தின் நிரந்தரத் தலைவன் - அரிச்சந்திரன்
தேவசபையின் சந்தேகம்
கர்ம யோகத்தின் நிரந்தரத்தலைவன் அரிச்சந்திரன் என்று சித்தர் கர்ம யோக சாஸ்திரத்தில் அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கச்சித்தருக்கு உபதேசித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்து அதன் விளைவுகளை இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு தெய்வீக உயிருள்ள சரித்திரம் அரிச்சந்திரனின் சரித்திரமாகும்.
ஒரு நாள் தேவேந்திரன் தலைமையில் தேவலோகத்தில் தேவசபை கூடியது. தேவசபையில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் முதலான தேவ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தேவசபையைக்கூட்டிய தேவேந்திரன் தன்னுடைய மனைவியான இந்திராணியின் ஆலோசனைப்படி தனக்கு ஒரு சந்தேகம் இருப்பதாகவும் அந்த சந்தேகத்திற்கு தேவசபையினர் யாராவது விடையளித்து சந்தேகத்தை தெளிவித்தால் தான் மிகவும் இன்பமடைவதாகவும் தெரிவித்தார். தேவசபை உறுப்பினர்களும் அவ்வாறே ஆகட்டும் என்று தலையசைத்தனர்.
ஈரேழு பதினான்கு லோகங்களைக்கொண்ட இவ்வுலகில் பொய்பேசாத, சத்தியம் தவராத, மனுநீதியில் சொல்லப்பட்டுள்ள அனைத்து நீதியையும் கடைபிடிக்கும் தர்மவான் யாராகிலும் இருக்கின்றாரா? என்று தேவசபையைப்பார்த்து இந்திரன் கேட்டார்.
தேவசபைக்கு வசிட்டமுனிவரின் பதில்
உடனே, வசிட்டமுனிவர் எழுந்து தேவேந்திரனைப் பார்த்து, அய்யா, தேவேந்திரரே! எம்முடைய சீடன் திரிசங்குவின் மைந்தன், சூரிய குலத்தில் பிறந்து அயோத்தி மாநகரை ஆளக்கூடிய ”அரிச்சந்திரன்” மட்டுமே ஈரேழு பதினான்கு லோகங்களைக்கொண்ட இவ்வுலகில் ”சத்தியத்தின் பிரதிநிதி” என்று சொன்னார். இதைக்கேட்ட தேவேந்திரன் பெருமகிழ்வெய்தினான்.
தேவசபையில் விஸ்சுவாமித்திர முனிவரின் ஆட்சேபம்
வசிட்டமுனிவரின் பேச்சைக்கேட்டு பொறாமைக்கொண்ட விஸ்வாமித்திரமுனிவர் உடனே எழுந்து தேவசபையில் ஆட்சேபம் தெரிவித்தார். வசிட்டர் சொல்வதைப்போன்று ”அரிச்சந்திரன்” தர்மவானில்லையென்றும்; அவன் நீதிநெறி கெட்டவனென்றும்; அவன் பொய் பேசுபவன் என்றும் அடுக்கடுக்கான குற்றங்களை அரிச்சந்திரன் மீது சுமத்தினார் விஸ்வாமித்திரமுனிவர்.
தேவசபையில் வசிட்டமுனிவரின் சபதம்
விஸ்வாமித்திரரின் பேச்சால் குழப்பமடைந்த தேவேந்திரன் இரு முனிவர்களையும் நோக்கி அவரவர் கருத்துக்களை நிரூபணம் செய்யவேண்டும் என்று பணித்தார். உடனே, வசிட்டமுனிவர் எழுந்து தேவசபையினரை நோக்கி சொல்ல ஆரம்பித்தார். அய்யா தேவேந்திரரே! என் சீடன் அரிச்சந்திரன் சத்தியத்தின் அதிபதி என்பது உலகறிந்த உண்மை, இருப்பினும் தேவசபைக்கு அதை நிரூபணம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது ஆகையினால் என் சீடன் அரிச்சந்திரன் சத்தியவான் இல்லையென்று விஸ்வாமித்திரமுனிவரால் நிரூபணம் செய்யப்பட்டால், நான் என்னுடைய தவ வலிமையின் பாதியை விஸ்வாமித்திரருக்கு அளிப்பதோடு மதுக்குடத்தை சுமந்து கொண்டு வடக்கு திசையை நோக்கிச்சென்னு நான் செய்த செயலுக்காக பாபவிமோசனம் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்.
தேவசபையில் விஸ்வாமித்திரமுனிவரின் சபதம்
உடனே, விஸ்வாமித்திரமுனிவர் எழுந்து தேவேந்திரனை நோக்கி அய்யா தேவேந்திரரே! அரிச்சந்திரன் அதர்மத்தின் அதிபதி என்பதை நான் நிரூபணம் செய்ய விரும்புகிறேன்; ஆதலால் நான் என்னுடைய நிரூபணத்தை முடிக்கும் வரை இந்த தேவசபை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கலையக்கூடாது, அதுமட்டுமல்லாமல் என் நிரூபண செயலுக்கு உதவி செய்வதற்கு நான் தேவர்கள் எவரையும் எப்பொழுது கூப்பிட்டாலும் மறுப்பு இல்லாமல் அவர்கள் வருகை தந்து நான் கூறுகின்றபடி மறுப்பில்லாமல் செயலாற்றி அரிச்சந்திரன் பொய்யன் என்பதை நிரூபிக்க உதவி செய்யவேண்டும்; அதுமட்டுமல்லாமல் நான் திரும்பி வரும்வரை வசிட்டமுனிவரும் இந்த தேவசபையை விட்டு எங்கும் செல்லக்கூடாது அதுமட்டுமல்லாமல் வசிட்டமுனிவர் எந்த வகையிலும் இந்த தேவசபையில் நிகழ்ந்தவைகளை அரிச்சந்திரனுக்குத்தெரிவிக்கக்கூடாது; என்னுடைய செயலில் நான் அரிச்சந்திரன் பொய்யன் என்பதை நிரூபிக்கத்தவறினால் என்னுடைய தவத்தின் ஒரு பாதியை வசிட்டருக்கு அளிப்பதோடு மதுக்குடத்தை சுமந்து கொண்டு தெற்கு திசை நோக்கிச்சென்று நான் செய்த செயல்களுக்காக பாபவிமோசனம் பெற்றுக்கொள்கிறேன் என்று சூளுரைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக