சனி, 17 டிசம்பர், 2016

இரண்டாவது அத்தியாயம் – ஸாங்க்ய யோகம்

1.ஸஞ்ஜயன் கூறுகிறார் – “அவ்விதம் இரக்கம் நிறைந்து நீர் நிரம்பிக் கலங்கிய கண்களுடன் சோகத்தோடு கூடிய அந்த அர்ஜுனனிடம் பகவான் மதுசூதனன் இவ்வாறு கூறினார்.”

2. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “அர்ஜுனா! தகாத சமயத்தில் இந்த மோகம் எந்தக் காரணத்தினால் உன்னை வந்தடைந்தது ? ஏனெனில், இது சான்றோரால் கடைப்பிடிக்கப் படாதது; சுவர்க்கத்தை அளிக்காதது; மேலும் புகழையும் தரவல்லதன்று.

3. அர்ஜுனா! அலியின் தன்மையை அடையாதே; உனக்கு இது பொருத்தமானதன்று. பரந்தபா! (எதிரிகளை வாட்டுபவனே!) இழிந்த உள்ளத்தின் தளர்ச்சியை விடுத்துப் போருக்காக எழுந்து நில்.”

4. அர்ஜுனன் கூறுகிறார் – “மதுசூதனா! நான் போர்க்களத்தில் எவ்வாறு அம்புகளினால் பாட்டனார் பீஷ்மரையும், ஆசார்யர் துரோணரையும் எதிர்த்துப் போரிடுவேன்? ஏனெனில், பகைவர்களை அழிப்பவனே! அவர்கள் இருவருமே பூஜிக்கத்தக்கவர்கள்.

5. மேன்மை பொருந்திய ஆசார்யர்களைக் கொல்வதைவிட, இவ்வுலகில் பிச்சையெடுப்பதால் கிடைக்கும் அன்னத்தை உண்பதுகூட மேன்மையைத் தரும். ஏனெனில், ஆசார்யர்களைக் கொன்றாலும் இவ்வுலகில் இரத்தம் கலந்த செல்வம், காம்ய வஸ்துக்கள் – இவற்றின் வடிவிலுள்ள போகங்களைத்தான் அனுபவிக்கப் போகிறேன்.

6. போரிடுவதா, வேண்டாமா என்ற இவ்விரண்டில் நமக்கு எது சிறந்தது? அல்லது நாம் அவர்களை வெற்றி கொள்வோமா? அல்லது நம்மை அவர்கள் வென்றுவிடுவார்களா? இதையும் அறியோம். எவர்களைக் கொன்று நாம் வாழக் கூட விரும்பவில்லையோ, நம்மவர்களான அந்தத் திருதராஷ்டிர குமாரர்களே நம் முன்னே நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்.

7. கோழைத்தனத்தினால் சீரழிந்த ஸ்வபாவம் கொண்டவனும், தர்ம விஷயத்தில் குழம்பிய மனதுடையவனும் ஆன நான் உங்களிடம் கேட்பதென்னவென்றால், எந்தச் சாதனை உறுதியாக மேன்மை பயக்கக்கூடுமோ, அதை எனக்குக் கூறுங்கள். நான் உங்களுடைய சீடன். ஆகவே, உங்களைச் சரணடைந்த எனக்கு அறிவுரை கூறுங்கள்.

8.ஏனெனில், பூவுலகில் எதிரிகளற்ற தனதானியங்கள் நிறைந்த ராஜ்யத்தையும், தேவர்களுக்கு அதிபதியாக இருப்பதையும் அடைந்தாலும் கூட, எது என்னுடைய புலன்களை வாடவைக்கின்ற சோகத்தைப் போக்கடிக்குமோ, அதை நான் காணவில்லை.”

9. ஸஞ்ஜயன் கூறுகிறார் – அரசே! உறக்கத்தை வென்ற அர்ஜுனன் அந்தர்யாமியான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் இவ்வாறு கூறிவிட்டுப் பின் ஸ்ரீகோவிந்தனிடம் ‘போர் புரிய மாட்டேன்’ என்று தெளிவாகக் கூறி மௌனமாகிவிட்டார்.

10. பரதகுலத்தோன்றலே! திருதராஷ்டிரரே! அந்தர்யாமியான ஸ்ரீகிருஷ்ணன் இரண்டு படைகளுக்கும் நடுவில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜுனனிடம் சிரித்தார்போல இந்த வார்த்தைகளைக் கூறினார்.

11. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “நீ துக்கப்படத்தகாத மனிதர்களின் பொருட்டு வருந்துகிறாய். மேலும், பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய். ஆனால், உயிர் போனவர்களுக்காகவும், உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை.

12. இவ்விதம் நான் எப்பொழுதும் இருந்ததில்லை என்பது இல்லவே இல்லை; நீயும் இருந்ததில்லை; இந்த அரசர்களும் இருந்ததில்லை என்பதும் இல்லை; இனி மேலும் நாம் இருக்கப் போவதுமில்லை என்பதும் இல்லை.

13. எப்படி ஜீவாத்மாவுக்கு இந்த உடலில் இளமையும் வாலிபப்பருவமும் முதுமையிம் வருகின்றனவோ, அப்படியே வேறு உடலும் வந்து சேர்கிறது. அவ்விஷயத்தில் தீர புருஷன் கலங்குவதில்லை.

14. குந்தியின் மைந்தனே! தட்பவெப்பம் மற்றும் சுகதுக்கங்களைக் கொடுக்கக்கூடிய புலன்களுடன் போக விஷயங்களின் சேர்க்கை உண்டாகி அழிபவை; அநித்தியமானவை. ஆகவே, பாரதா! நீ அவற்றைப் பொறுத்துக்கொள்.

15. ஏனெனில், புருஷர்களிற் சிறந்தவனே! சுகதுக்கங்களைச் சமமாக ஏற்கின்ற எந்த தீரனான மனிதனை, புலன்கள் மற்றும் போக விஷயங்களின் சேர்க்கை கலங்க வைப்பதில்லையோ, அவன் மோட்சத்திற்குத் தகுதி பெறுகிறான்.

16. இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை. மேலும், உண்மையாக இருப்பதற்கு இல்லாமை என்பதும் இல்லை. இந்த இரண்டின் தத்துவமும் தத்துவ ஞானிகளால் கண்டறியப்பட்டது.

17. அழிவற்றதுதான் என்று அதை அறிந்துகொள். எதனால் காணப்படும் பொருட்கள் அனைத்தும் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த அழிவற்றதற்கு அழிவை உண்டாக்குவதற்கு எவரும் ஆற்றல் பெற்றவரல்லர்.

18. அழிவற்ற, விளக்க முடியாத, நித்தியமான ஜீவாத்மாவினுடைய இந்த அனைத்து உடல்களும் அழியக்கூடியவைகளாகக் கூறப்பட்டுள்ளன. ஆகவே, பரதகுலத்தோன்றலே! அர்ஜுனா! நீ போர் புரிவாயாக

19. எவன் இந்த ஆத்மாவைக் கொல்பவனாக நினைக்கிறானோ மற்றும் எவன் இந்த ஆத்மாவைக் கொல்லப்பட்டவனாக நினைக்கிறானோ, அந்த இருவருமே (உண்மையை) அறியாதவர்கள். ஏனெனில், இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை; யாராலும் கொல்லப்படுவதுமில்லை.

20.இந்த ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை; அன்றியும் இறப்பதும் இல்லை. அவ்வாறே முன் உண்டாகிப் பிறகு ஏற்படக்கூடியது என்பதும் இல்லை. ஏனெனில் இந்த ஆத்மா பிறப்பற்றவன்; நித்தியமானவன்; எக்காலத்திலும் உள்ளவன்; பழைமையானவன். உடல் கொல்லப்படும்போதும் இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.

21. பிருதையின்(குந்தியின்) மைந்தனே, அர்ஜுனா! எந்த மனிதன் இந்த ஆத்மாவை அழிவற்றவன்; நித்தியமானவன்; பிறப்பற்றவன்; மாறுதலற்றவனென்று அறிகிறானோ அவன் எவ்வாறு யாரைக் கொல்லச் செய்கிறான்? எப்படி யாரைக் கொல்கிறான்?

22.எப்படி மனிதன் நைந்துபோன பழைய துணிகளை நீத்துவிட்டு, வேறு புதிய துணிகளை எடுத்துக் கொள்கிறானோ, அவ்வாறே ஜீவாத்மா நைந்துபோன பழைய உடல்களை நீத்துவிட்டு, வேறு புதிய உடல்களை அடைகிறான்.

23.இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை; இவனை நெருப்பு எரிப்பதில்லை; இவனைத் தண்ணீர் நனைப்பதில்லை; மேலும், காற்று உலரவைப்பதில்லை.

24.இந்த ஆத்மா வெட்டுப்பட முடியாதவன்; எரிக்கப்பட முடியாதவன்; நனைக்கப்பட முடியாதவன்; மேலும் சந்தேகமின்றி உலர்த்தப்பட முடியாதவன்; மற்றும் இந்த ஆத்மா நித்தியமானவன்; எங்கும் நிறைந்தவன்; இயக்கமற்றவன்; ஸ்திரமாக இருப்பவன்; சாசுவதமானவன்.

25. இந்த ஆத்மா புலன்களுக்குப் புலப்படாதவன்; மனத்தால் சிந்திக்க முடியாதவன்; மேலும், மாறுதல் இல்லாதவன் என்று கூறப்படுகிறது. ஆகையால், அர்ஜுனா! இந்த ஆத்மாவை மேலே கூறியவாறு அறிந்துகொண்டு, நீ வருத்தப்படுவது உசிதமில்லை.

26. ஆயினும், இந்த ஆத்மாவை எப்பொழுதும் பிறந்து கொண்டே இருப்பவன்; அவ்வாறே எப்பொழுதும் இறந்து கொண்டே இருப்பவன் என்று நீ கருதினாலும் கூட, நீண்ட கைகளை உடையோனே! நீ இவ்வாறு வருத்தப்படுவது நன்றன்று.

27.ஏனெனில், (இதன்படி) பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயமானது; இறந்தவனுக்கும் பிறப்பு நிச்சயம். ஆகவே தவிப்பதற்கான உபாயமே இல்லாத இந்த விஷயத்தில் நீ துயரப் படுவது தக்கதன்று.

28. அர்ஜுனா! எல்லா உயிரினங்களும் பிறப்பிற்குமுன் தென்படாதனவாக இருந்தன. மேலும், இறப்பதற்குப் பின்னும் தென்படாமலே போகக்கூடியன. நடுவில் மட்டுமே தென்படுகின்றன. பிறகு இந்நிலையில் ஏன் வருத்தப்பட வேண்டும்?

29. யாரோ ஒரு மஹாபுருஷர்தான் இந்த ஆத்மாவை ஆச்சரியமாகப் பார்க்கிறான். மேலும், அவ்வாறே வேறு ஒரு மஹாபுருஷன்தான் இந்தத் தத்துவத்தை ஆச்சரியமாக வர்ணிக்கிறான். மற்றும் வேறொரு தகுதி பெற்றவன்தான் ஆத்மாவை ஆச்சரியமாகக் கேட்கிறான். மேலும், யாராவது ஒருவன் அப்படிக் கேட்டாலும் ஆத்மாவை அறியவே மாட்டான்.

30. அர்ஜுனா! இந்த ஆத்மா எல்லோருடைய உடலிலும் எப்பொழுதும் கொல்லப்பட முடியாதவன். ஆகவே, எல்லா உயிரினங்களுக்காகவும் நீ வருந்துவது தகுந்ததன்று.

31.அவ்வாறே தன்னுடைய தர்மம் என்று பார்த்தாலும் நீ பயப்படக்கூடாது. ஏனெனில், க்ஷத்திரியனுக்குத் தர்ம சம்மதமான போரைக் காட்டிலும் வேறு ஒரு மேன்மை தரும் கடமை கிடையாது.

32.பார்த்தா! தானாகவே நேர்ந்திருக்கிறதும் திறந்து வைக்கப்படுள்ளதுமான சுவர்க்கவாயில் வடிவான இத்தகைய யுத்தத்தை பாக்கியமுடைய க்ஷத்திரியர்கள்தான் அடைகிறார்கள்.

33. ஆகவே, இந்தத் தர்மத்தோடு கூடிய யுத்தத்தை நீ செய்யவில்லையானால், அப்போது ஸ்வதர்மத்தையும் புகழையும் இழந்து பாவத்தை அடைவாய்.

34. மேலும், அனைவரும் உன்னுடைய நீண்ட காலம் இருக்கக் கூடிய இகழ்ச்சியைப் பற்றிக்கூடப் பேசுவார்கள். மேலும், கௌரவம் உடையவனுக்கு இகழ்ச்சி மரணத்தைக் காட்டிலும் அதிக துன்பத்தைக் கொடுக்கக் கூடியது.

35. மேலும், எவர்களுடைய பார்வையில் நீ முன்னர் மிகவும் பெருமை பெற்றவனாக இருந்து விட்டு, இப்பொழுது தாழ்வை அடைவாயோ, அந்த மகாரதிகள் உன்னை பயத்தினால் பின்வாங்கியவனாக நினைப்பார்கள்.

36.உன்னுடைய எதிரிகள் உன்னுடைய திறமையை நிந்தித்துப் பலவிதமான கூறத்தகாத வார்த்தைகளையும் கூறுவார்கள். அதைவிட அதிகத் துயரம் கொடுக்கக் கூடியது வேறு என்ன இருக்கும்?

37. கொல்லப்பட்டாலோ சுவர்க்கத்தை அடைவாய்; வெற்றி பெற்றாலோ புவியை அனுபவிப்பாய்.ஆகையினால், அர்ஜுனா! நீ யுத்தத்தின் பொருட்டு உறுதியாக நிச்சயித்துக் கொண்டு எழுந்திரு.

38.வெற்றி-தோல்வியையும், லாப-நஷ்டங்களையும், சுக-துக்கங்களையும், சமமாகக் கருதி, அதற்குப்பின் யுத்தத்திற்குத் தயாராவாயாக. இவ்விதம் யுத்தம் செய்வதால் நீ பாபத்தை அடையமாட்டாய்.

39.பார்த்தா! இந்த புத்தி உனக்கு ஞானயோக விஷயத்தில் கூறப்பட்டது. இனி, இதனைக் கர்மயோக விஷயத்தில் கேள். அந்த புத்தியோடு கூடியவனாக ஆகி கர்மபந்தத்தை முழுமையாக விலக்கி விடுவாய்; அதாவது, முற்றிலும் அழித்துவிடுவாய்.

40. இந்தக் கர்மயோகத்தின் ஆரம்பம், அதாவது விதை அழிவது என்பது இல்லை; நேரெதிரான விளைவும் இல்லை. இந்தக் கர்மயோகம் என்கிற தர்மத்தைச் சிறிதளவு கைக்கொள்வதும் கூட பெரியதான பிறப்பு, இறப்பு என்ற பயத்திலிருந்து காப்பாற்றுகிறது.

41.அர்ஜுனா! இந்தக் கர்மயோகத்தில் தீர்மானமான புத்தி ஒன்றுதான் இருக்கிறது. ஆனால், ஒரு விஷயத்திலும் நிச்சய புத்தி இல்லாத, விவேகமற்ற, பயனில் ஆசையுள்ள மனிதர்களுடைய புத்திகள் நிச்சயமாகப் பலநோக்கங்களுடையனவாகவும் முடிவற்றவையாகவும் இருக்கின்றன.

42.43.44. அர்ஜுனா! போகங்களில் மூழ்கியவர்களும், சுவர்க்கமே மேலானது என்று நினைப்பவர்களும் கர்மங்களின் பயன்களைப் புகழ்ந்துரைக்கும் வேதவாக்கியங்களிலேயே பிரியம் வைத்து வேறொன்றும் இல்லை என்று வாதம் செய்கின்ற அறிவிலிகள், கர்மங்களின் பயனான பிறவியை அளிக்கின்ற போகங்கள் மற்றும் செல்வங்கள் பெறுவதற்குரிய பல வகையான கர்மங்களைக் கூறுகின்ற மலர்போலக் கவர்ச்சியுள்ள எந்தப் பேச்சை எடுத்துப் பேசுகிறார்களோ, அந்தப் பேச்சினால் மனம் அபகரிக்கப்பட்டு போகத்திலும் செல்வத்திலும் மிகுந்த பற்றுள்ளவர்களுக்குப் பரமாத்மாவிடம் நிச்சயமான கருத்துள்ள புத்தி நிலைபெற்று இருப்பதில்லை.

43.அர்ஜுனா! மேலே கூறியபடி வேதங்கள் முக்குணங்களின் செயல்களான போகங்களையும், அவற்றின் சாதனை முறைகளையும் பற்றிக் கூறுபவை. ஆகவே, நீ அந்த போகங்களிலும் அவற்றின் சாதனங்களிலும் பற்று கொள்ளாதவனாக, மகிழ்ச்சி-துயரம் முதலிய இரட்டைகளுக்கு ஆட்படாதவனாக, நித்தியப் பொருளான பரமாத்மாவிடம் நிலைபெற்று யோகக்ஷேமத்தை – பொருள் சேர்ப்பது, காப்பது என்பதை – விரும்பாதவனாகத் தனக்கு வசப்பட்ட மனம் உடையவனாக ஆகக்கடவாய்.

44.எல்லாப் புறங்களிலும் நிறைந்த நீர்நிலையை அடைந்தபிறகு, சிறிய நீர்நிலையினால் மனிதனுக்கு எவ்வளவு பயன் இருக்கிறதோ, பிரம்மத்தைத் தத்துவரீதியாக அறிந்த பிராமணனுக்கு அனைத்து வேதங்களினாலும் அவ்வளவு பயன்தான் கிடைக்கும். (பெரிய நீர்நிலையை அடைந்தவனுக்குக் கிணறு, குளம் போன்ற சிறிய நீர்நிலைகள் தேவையற்றுப் போவதுபோல் பிரம்மானந்தத்தைப் பெற்ற பிறகு, ஆனந்தத்தைப் பெறுவதற்காக வேதங்கள் தேவைப்படுவதில்லை.)

45. உனக்குக் கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின் பயன்களில் ஒருக்காலும் உரிமையில்லை. ஆகவே, நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்குக் காரணமாக ஆகாதே. மேலும், உனக்குக் கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது.

46. அர்ஜுனா! பற்றினைத் துறந்து மேலும் கைகூடுவது, கைகூடாமலிருப்பது என்பதில் சமநோக்கு உடையவனாக இருந்து, யோகத்தில் நிலைபெற்றுச் செய்யவேண்டிய கர்மங்களைச் செய். சமபாவனைதான் யோகம் என்று கூறப்படுகிறது.

47. இந்தச் சமபாவனையான புத்தியோகத்தைக் காட்டிலும் பயன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்த ரகத்தைச் சேர்ந்தது. ஆகவே, அர்ஜுனா! சமபுத்தியில் தஞ்சம் அடைவாய். ஏனெனில், பலனுக்குத் தம்மைக் காரணமாக்கிக் கொள்கிறவர்கள் இரக்கத்துக்கு உரியவர்கள்.

48. சமபுத்தியுடையவன், புண்ணியம், பாவம் என்ற இரண்டையும் இவ்வுலகிலேயே விட்டு விடுகிறான். அதாவது, அவற்றில் இருந்து விடுபடுகிறான். இதனால், நீ சமத்துவ யோகத்தில் ஈடுபட்டிரு. இந்தச் சமத்துவரூப யோகம்தான் கடமையை ஆற்றுவதில் திறமையாகும். கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உபாயமாகும்.

49. ஏனெனில் சமபுத்தியுடைய ஞானிகள் கர்மத்தினால் உண்டாகும் பயனைத் தியாகம் செய்து, பிறப்பு என்ற பந்தத்தில் இருந்து விடுபட்டு, மாறுதல்கள் அற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.

50.எப்பொழுது உன்னுடைய புத்தி மோகம் என்ற சேற்றை முற்றிலுமாகக் கடந்து விடுகிறதோ, அப்பொழுது நீ கேட்டது பற்றியும், கேட்கப்படுகிறவை பற்றியும், இவ்வுலக-பரலோகங்களில் ஏற்படும் அனைத்துப் போகங்களில் இருந்தும் வைராக்கியத்தை அடைவாய்.

51. பற்பல வசனங்களைக் கேட்டுச் சஞ்சலமாகியுள்ள உன்னுடைய புத்தி, எப்பொழுது பரமாத்மாவிடம் அசையாமல் மேலும் திடமாக நிலைபெறுகிறதோ, அப்பொழுது யோகத்தை அடைவாய் – நீ பரமாத்மாவிடம் நிரந்தரமாக ஒன்றிவிடுவாய்.”

52. அர்ஜுனன் கேட்கிறார் – “கேசவா! சமாதியில் நிலைபெற்றுப் பரமாத்மாவை அடைந்த ஸ்திரபுத்தி உள்ளவனின் இலக்கணம் என்ன? இந்த ஸ்திரபுத்தியுள்ள புருஷன் எப்படிப் பேசுவான்? எப்படி உட்காருவான்? மேலும் எப்படி நடப்பான்?”

53.ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ அர்ஜுனா! எப்பொழுது இந்த மனிதன் மனத்திலுள்ள எல்லா ஆசைகளையும் அறவே துறக்கிறானோ, மேலும் ஆத்மாவினால் ஆத்மாவிடமே ஆன்ந்தமாக இருக்கிறானோ, அப்பொழுது அவன் ஸ்திதப்ரக்ஞன் என்று கூறப்படுகிறான்.

54. துன்பங்கள் நேர்கையில் எவனுடைய மனம் கலங்குவது இல்லையோ, சுகங்களை அடையும்போது அவற்றில் சிறிதுகூட ஆசை கொள்வதில்லையோ, எவனுக்கு விருப்பு, பயம், கோபம் ஆகிய இவை முற்றும் அற்றுப்போயினவோ,அத்தகைய முனிவன் ஸ்திதப்ரக்ஞன் என்று குறப்படுகிறான்.

55. எவன் ஒருவன் அனைத்திலும் பாசம் வைக்காமல் அந்தந்த நல்ல அல்லது கெட்ட பொருளை அடைந்து மகிழ்வதுமில்லையோ வெறுப்பதுமில்லையோ, அவனுடைய புத்தி ஸ்திரமானது.

56. ஆமை, எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனது உறுப்புக்களை உள்ளிழுத்துக் கொள்வது போல, எப்போது இந்த மனிதன் புலன் நுகர்ப் பொருட்களில் இருந்து புலன்களை முற்றிலும் இழுத்துக் கொள்கிறானோ, அப்போது அவனுடைய புத்தி ஸ்திரமானது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

57. புலன்களின் மூலம் போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத மனிதனுடைய புலன்நுகர் பொருட்கள் மட்டுமே விலகுகின்றன. ஆனால், அவற்றில் தங்கியுள்ள பற்று விலகுவதில்லை. இந்த ஸ்திரப்ரக்ஞனுக்கோ பரமாத்மாவைத் தரிசித்தப் பிறகு, அப்பற்றும் விலகிவிடுகிறது.

58. அர்ஜுனா! பற்று அழியாததால் கலக்குபவையான புலன்கள் முயற்சியுள்ள புத்திசாலியான மனிதனின் மனத்தைக்கூட பலவந்தமாக இழுத்துச் சென்று விடுகின்றன.

59. அந்த அனைத்துப் புலன்களையும் வசப்படுத்தி ஒருமுகப் படுத்திய சித்தமுடையவன் என்னையே பரமகதியாகக் கொண்டு தியானத்தில் அமரவேண்டும். ஏனெனில், எவனுடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்ரனவோ, அவனுடைய புத்தி ஸ்திரமாகிறது.

60. புலன்நுகர்ப் பொருட்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கிற மனிதனுக்கு, அவ்விஷயங்களில் பற்று ஏற்படுகிறது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகிறது; ஆசையிலிருந்து (ஆசைக்கு இடையூறு வருவதனால்) கோபம் உண்டாகிறது.

61. கோபத்தினால் மிகுந்த அறிவின்மை ஏற்படும்; அறிவின்மையால் நினைவு தடுமாற்றம் உண்டாகிறது; நினைவு தடுமாறுவதனால் புத்தி அதாவது விவேகத்தின் அழிவு உண்டாகிறது; விவேகம் அழிவதனால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சியடைகிறான்.

62. ஆனால், தன்வசப்பட்ட மனதுடைய சாதகன் விருப்பு-வெறுப்புகளின்றித் தன்னால் வசப்படுத்தப்பட்ட புலன்கள் மூலம் போக விஷயங்களில் சஞ்சரித்துக் கொண்டு உள்ளத் தெளிவை அடைகிறான்.

63. உள்ளத்தெளிவு ஏற்பட்டுவிட்டால், இவனுடைய எல்லா துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். தெளிவடைந்த மனமுள்ள கர்மயோகியின் புத்தி விரைவிலேயே எல்லா விஷயங்களில் இருந்தும் விலகிப் பரமாத்மா ஒன்றிலேயே நன்கு ஸ்திரமாகி விடுகிரது.

64. மனத்தையும், புலன்களையும் வெற்றி கொள்ளாதவனுக்கு நிச்சயமான புத்தி இருக்காது. உறுதியான புத்தியற்றவனுக்கு மனத்தில் பாவனையும் தோன்றாது. அவ்வாறே, பாவனையற்றவனுக்கு அமைதியும் கிடைக்காது. அமைதியற்றவனுக்குச் சுகம் ஏது?

65. ஏனெனில், நீரில் போய்க் கொண்டிருக்கும் ஓடத்தைக் காற்று அடித்துக் கொண்டு போவது போல, போகங்களில் சஞ்சரிக்கின்ற புலன்களில் எந்த ஒரு புலனுடன் மனம் ஒட்டியிருக்கிறதோ, அந்த ஒரே புலன் மனம் வசப்படாத மனிதனின் புத்தியைக் கவர்ந்து செல்கிறது.

66. ஆகையால், நீண்ட புஜங்கள் உடையவனே! (அர்ஜுனா!) எந்த மனிதனுடைய புலன்கள் புலன்களுக்குரிய போகப்பொருட்களில் இருந்து எல்லாவிதங்களிலும் மீட்கப்பட்டு விட்டனவோ, அவனுடைய புத்தி ஸ்திரமானது.

67. அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவு போல இருக்கிறதோ, அந்த நித்தியமான, ஞான வடிவான பரமானந்தத்தை அடைவதில் ஸ்திதப்ரக்ஞனான யோகி விழித்திருக்கிறான். மேலும், எதில் அழியும் தன்மையுடைய உலகியல் இன்பங்களை அடைவதில் அனைத்து உயிரினங்களும் விழித்திருக்கின்றனவோ, பரமாத்மாவின் தத்துவத்தை உணர்கின்ற முனிவருக்கு அது இரவுபோல ஆகிவிடுகிறது.

68. எவ்விதம் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நீர் நிறைந்தும் அசைவில்லாமல் இருக்கும் கடலில் பல ஆறுகள் அதைக் கலங்கச் செய்யாமலே கலந்து விடுகின்றனவோ, அதேபோல ஸ்திதப்ரக்ஞனான மனிதனை அனைத்து போகங்களும் எவ்வித மாறுதலும் உண்டுபண்ணாமலேயே வந்து அடைகின்றன. அவனே மேலான அமைதியை அடைகிறான். போகங்களை விரும்புபவன் அமைதியை அடைவதில்லை.

69. எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவனாக, அகங்காரமற்றவனாக, சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக சஞ்சரிக்கிறானோ, அவனே அமைதியை அடைகிறான். அதாவது, அவனே சாந்தியைப் பெறுகிறான்.

70. அர்ஜுனா! இதுதான் பிரம்மத்தை அடைந்தவனின் நிலை. இதை அடைந்தபின் யோகி ஒருபோதும் மோகமடைவதில்லை. மேலும் உயிர் பிரியும் நேரத்திலும் இந்த பிரம்மநிலையிலேயே நிலைபெற்றுப் பிரம்மானந்தத்தை அடைகிறான்.”

//-- இதுவரை “ஸாங்க்ய யோகம்” என்ற இரண்டாவது அத்தியாயம்--//

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக