ஞாயிறு, 4 டிசம்பர், 2016

ஸ்ரீமத் பகவத்கீதை



கீதை , பெரிய தத்துவ மேதைகளும் அறிஞர்களும் மட்டுமே படிக்கவேண்டும் என்ற தவறான கருத்து நம்மிடம் பரவியுள்ளது.சடங்குகளில் காட்டும் ஆர்வத்தை நமது மதக் கோட்பாடுகளில் உள்ள உண்மைகளை அறிந்துகொள்ளக் காட்டத் தவறிவிட்டோம்.
கீதையில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, என்ன செய்கிறோம் என்பதை சீர்தூக்கிப் பார்த்துத் தெளிவு கொள்ளவேண்டும் என்பதே முக்கியமாகக் கூறப்பட்டுள்ளது.பாவம் செய்தவனும் தனது அறிவில் தெளிவு பெற்று, பாவங்களில் இருந்து மீண்டு வரலாம் என்கிறது..... சந்நியாசம் என்பது பொறுப்புகளில் இருந்து தப்பித்துச் செல்வது அல்ல. பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது என்னும் புரட்சிகரமான கருத்தைக் கூறுகிறது.



கீதையைப் படிப்பவர்கள், அது ஒரு மத நூல் மட்டுமல்ல, சிறந்த மனோதத்துவ நூல் என்றும் புரிந்துகொள்ளலாம்.

வாழ்க்கையைச் சம நிலையுடன் நோக்கவும், குழப்பம் இல்லாமல் மனம் தடுமாறாமல், மனத் தெளிவுடன் வாழவும் கீதை அருமையான வழிகளைச் சொல்லுகிறது.அந்தக் கருத்துக்களை நான் எளிமைப் படுத்தி இங்கே கூற விரும்புகிறேன். அனைவரும் இதைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்..

கீதோபதேசத்தின் காரணம்.

வேதங்கள் அநாதியானவை அவற்றின் காலம் இன்னதென்று இதுவரையில் யாருமே வரயறுத்துச் சொன்னதில்லை.

வேதங்களைச் செய்தவர் யார்?

யாருக்குமே தெரியாது..........ஒருவேளை ரிஷிகள் வேதத்தை இயற்றியிருப்பார்களோ...அப்படியானால் அந்த ரிஷிகளின் காலம் என்ன?

என்ன ஆதாரம் நம்மிடம் இருக்கிறது? ரிஷிகள் நமக்கு இந்த வேதங்களைக் கூறியபோதிலும், அவர்கள் தானாக இவைகளைப் படைக்கவில்லை. அவர்கள் நிஷ்டையில் இருந்தபோது, இந்த வேதங்கள் அவர்களது காதில் தானாக ஒலித்தவை.ரிஷிகளின் தவத்தால் ஏற்பட்ட ஞானம், மனவலிமை அவர்களுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்தது.

இறைவனை நாதப் பிரும்மம் என்று கூறுகிறோம். நாத வடிவங்களால் ரிஷிகளுக்கு இந்த வேதங்கள் அருளப்பட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே வேதங்கள் நிலையான என்றும் அழியாத உண்மைமையின் வடிவம் ஆகும்.

வேதங்களைச் சுலபமாக அனைவராலும் புரிந்துகொள்ள இயலாது.வேதங்களின் விளக்கமாக உப-நிஷதங்கள் தோன்றின.இந்த உப நிஷதங்கள், குரு-சீடன் பேசிக்கொள்வதுபோல அமைந்தவைலைந்த உபநிஷதங்கள் அருத்துக்கள் அனைத்தும் உள்ளடக்கி கீதை நமக்குக் கிடைத்துள்ளது.பகவத் கீதையின் முழுமையை, உண்மையை, அது கூறும் கருத்தை எவனொருவன் புரிந்து கொள்கிறானோ, அவந்தான் இந்து மதத்தின் மூலக் கருத்தைப் புரிந்துகொண்டவனாவான்.......வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டவனாவான்.

மற்ற மதங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு இந்து மதத்துக்கு உள்ளது.பிற மதங்கள் வாழ்க்கை நெறிகளைப் பற்ரிப் பேசுகின்றன.மனித வாழ்க்கை மேம்பாடு அடையும் வழிமுறைகளைக் கூறுகின்றன.

ஆனால் இந்துமதம் பிரபஞ்ச ரகசியத்தை விளக்க முயற்சிக்கிறது.படைப்பின் காரண காரியத்தைவிளக்கி அதன்வழியே வாழ்க்கை நெறியை வகுத்துக் காட்டுகிறது.மிகவும் சிக்கலான ஒன்றை, புதிர்போலத் தோன்றும் ஒன்றை, எளிமையாக்கி உணர்த்த இந்து சாஸ்திரங்கள் முயற்சிக்கின்றன. இந்த முயற்சிகளின் கருத்துப் பெட்டகமே கீதை.

வேதங்கள், ரிஷிகளுக்கு அருளப்பட்டன என்று பார்த்தோம். அவை அமைதி நிரம்பிய வனங்களில், தனிமையின் ரிஷிகள் இருந்தபோது அறுளப்பட்டவை.ஆனால் கீதையின் உபதேசத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட களம் முற்றிலும் மாறுபட்டது.போர்க்களத்தில்தான் கீதை உபதேசிக்கப்பட்டது...இருபுறங்களிலும் போர்ப்படைகள் அணிவகுத்து நிற்க போர் முரசு ஒலித்து போர்ப் பிரகடணம் செய்யப்போகும் நிலையில் கீதோபதேசம் ஆரம்பம் ஆகிறது.

கீதையில் உபதேசிக்கப்படும் கருத்துக்களைப் போலவே, கீதை உபதேசிக்கப்பட்ட இடமும் காலமும் முக்கியமானவை.

கீதையை உபதேசிப்பவர் யார்?.................... கிருஷ்ணபரமாத்மா.

உபதேசத்தைக் கேட்டுக்கொள்பவன்......போர்க்கலையில் வல்லவனான அர்ச்சுனன்.

போர் செய்வதா வேண்டாமா....என்று தடுமாற்ரம் அடைந்து கையில் பிடித்த காண்டீபத்தை நழுவவிடும் நிலையில் இருந்த அர்ச்சுனனின் மன மயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்த பரமாத்மா கீதையை உபதேசிக்கிறார்...அமைதியான சூழ்நிலையிலே உருவான வேதங்களின் கருத்துக்களுக்கு போர்க்களத்திலே விளக்கம் கிடைக்கிறது.இது முரன்பாடாகத் தோன்றினாலும் , இந்த முரன்பாடே கீதையின் தனிச் சிறப்பும் அழகும் ஆகும்.

அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட குழப்பம் அவனுக்கு மட்டும் ஏற்படும் குழப்பம் அல்ல. வாழ்க்கை என்னும் போர்க்களத்திலே அனைவருக்கும் ஏற்படக்கூடிய குழப்பம் என்றுதான் கொள்ளவேண்டும்.அர்சுனனுக்கு உபதேசம் செய்து அவனுடைய குழப்பத்தை மட்டும் கிருஷ்னபிரான்

தீர்த்து வைக்கவில்லை.அதன்மூலம் மனித இனத்துக்கு ஏற்படும் அத்துனைக் குழப்பங்களுக்கும் வழிகாட்டி தெளிய வைக்கிறார்.

எது நல்லது, எது கெட்டது என்று புரியாமல் தவிக்கும் மானிட இனத்தின் பிரதிநிதியாகக் காட்சியளிக்கிறான் அர்ச்சுனன்.அவனது சந்தேகத்தைத் தீர்த்துவைத்து, தர்மத்தின் பக்கம் நின்று மனிதைனம் செயல்படவேண்டிய வழிமுஐகளை அற்புதமாக கீதையின் மூலம் விளக்குகிறார் கிருஷ்னர்.

தர்மத்தின் தன்மை, வாழ்க்கையின் பொருள், மரணத்தின் அவசியம் ஆகியவற்றை தள்ளத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதே கீதை.எனவேதான் அதர்மம் தலைதூக்கி ஆர்ப்பரிக்க, தர்மம் அதை வெல்லும் வகையில் எதிர் நிற்க...,மரணஓசை எங்கும் ஓங்காரக் கூச்சலிடும் போர்க்களம் கீதோபதேசத்துக்கு நிலைக்களனகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மனித வாழ்க்கையே ஒரு முடிவில்லாத போராட்டம். உயிர்கள் எதைப் பெற விரும்பினாலும் அதற்காக அவை போராடித்தான் ஆகவேண்டும்.ஒரு உயிரை எதிர்த்து இன்னொரு உயிர் போராடித்தான் ஆகவேண்டும் என்பது இயற்கையின் நியதி.போராட்டத்தில் தோற்றுப் போகும் இனங்கள் காலப் போக்கில் அழிந்துவிடுகின்றன.அதுபோலவே வாழ்க்கைப் போராட்டத்தில் போராடத் தெரியாத மனிதனும் தனது

வாழ்க்கையில் தோல்வி அடைகிறான்.போராட்டம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை.

போராட்டம் எதற்காக நடைபெறவேண்டும்?

ஏன் நடைபெறவேண்டும்?

எப்படி நடைபெறவேண்டும்?

இவை அனைத்தையும் கீதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவு படுத்துகிறது..

போர்க்களத்தில் சங்கநாதம் முழங்குகிறது. போர் முரசு ஒலிக்கிறது..ஆனால் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டவேண்டிய அர்ச்சுனன் குழப்பமுடன் நிற்கிறான். ஏன்?

அவனுக்கு எதிரில், ஞானபண்டிதரும், மகா புருஷரும், அவனுடைய பாட்டனாரும் ஆன பீஷ்மர் நிற்கிறார்.அவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுத்த துரோணர் நிற்கிறார்.அவனுடைய பங்காளிகள் நிற்கிறார்கள்.அவன் மதித்துப் போற்றும், மாவீரன் கர்னன் போன்ற வீரர்கள் நிற்கிறார்கள்.இவர்கள் அனைவரையும் கொன்று குவிக்கவேண்டியது அவசியம்தானா என்று அர்ச்சுனன் நினைக்கிறான்..அவர்கள்மேல் இரக்கப்படுகிறான்.குருவையும், சகோதரர்களையும் போரில் கொன்று தான் வெற்றி அடைவதால் கிடைக்கப் போகும் லாபம் என்ன என்று எண்ணிப்பார்க்கிறான்.அதன் முடிவாகப் போரே வேண்டாம் என்று வில்லை நழுவவிட்டு களத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் அவனுக்குள் வலுக்கிறது.பெரும் பாவச் செயலை தான் செய்ய இருந்ததை நினைத்து மனம் பதைக்கிறான்..அவனது கரங்கள் நடுங்கிச் சோர்வடைகின்றன.நாக்கு உலர்ந்துபோகிறது....எதிரிகளைக் கண்டதுமே வில்லை இறுகப் பற்றும் அவனது கரங்கள் முதல் முறையாக வில்லை நழுவ விடுகிறது.

இவர்களைக் கொன்று தான் வாழ்வதால் என்ன பயன் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்கிறான்.

"இவர்களைக் கொன்றுவிடுவதால் மூன்று உலகங்களில் முடி சூட்டிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தாலும் , என் எதிரே நிற்கும் எனது உறவினர்களையும் குருமார்களையும் கொன்று குவிக்க நான் சம்மதிக்கமாட்டேன்.இதனால் பாவத்தைத் தவிர எனக்கு என்ன கிடைக்கப் போகிறது" என்று சரமாரியாக எழுந்த வினாக்களை கிருஷ்ணபரமாத்தா புன்முறுவலுடன் எதிர் கொள்கிறார்.

"இயற்கையே ஒரு முடிவில்லாத கொலைக்களம் என்பதை நீ அறியவேண்டும் அர்ச்சுனா. அப்படிக் கொலைக்களமான உலகில் வந்தபின்பு, கொலையைச் செய்வதற்கு தயக்கம் காட்டக் கூடாது.அது அஹிம்சை அல்ல.அறநெறியும் அல்ல.அதர்மத்தை அழிக்க தர்மம் நின்றுதான் ஆகவேண்டும்" என்று அர்ச்சுன னுக்கு தர்மம் என்றால் என்ன என்று தெளிவாக்குகிறார்.,

அர்ச்சுனனைப் போர் புரியத் தூண்டும் அவர் அவனை உண்மையில் ஒரு கொலைகாரனாகவா ஆக்குகிறார்? நிச்சயமாக இல்லை.

கொலைக்களமாகக் காட்சிதரும் உலகத்தில், தனக்கென்று உண்டான கடமைகளைச் செய்து மட்டுமே தர்மத்தை நிலைநாட்ட முடியும் என்பதையே பரமாத்மா தெளிவு படுத்துகிறார்.
 
  பக்தி யோகம்

மனத் தளர்ச்சி அடைந்து தயங்கி நின்ற அர்ச்சுனனைப் பார்த்த கிருஷ்ணபிரான், " வீரர்களுக்குப் பொருந்தாதபடி வீரனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் சோர்வு உனக்கு எப்படி உண்டானது?.போர் உடை தரித்து ஆயுதபாணியாக நிற்கும் வீரனுக்கு இப்படிக் கலக்கம் வரலாமா?.சந்தர்ப்பங்களை உருவாக்கி அதற்கு அதிபதியாக இருக்கவேண்டிய வீரன் இப்படிக் கோழையாக நிற்கலாமா?இழிவான உள்ளச் சோர்வைக் கைவிட்டு துடித்து எழு." என்றார்.

அதற்கு அர்ச்சுனன், " எனது பாட்டனாரான பீஷ்மரை எதிர்த்து நான் எப்படிப் போரிடுவது?எனது குருவான துரோணருக்கு எதிராக எனது காண்டீபத்தை நான் வளைக்க முடியுமா?" என்றெல்லாம் புலம்பினான்.

"அர்ச்சுனா....இங்குதான் நீ மாபெரும் தவறு செய்கிறாய்.!எதிரே நிற்பவர் யார் என்று பார்க்காதே.. வீரன் தனது கடமையைச் செய்யும்போது

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக்கூடது.அதர்மத்துக்கு துணையாக அவர்கள் கெளரவர்கள் பக்கம் நிற்கும்போதே, அவர்களை கொல்ல உனக்கு சகல உரிமையும் கிடைத்துவிடுகிறது.நீ குறிப்பிடும் பீஷ்மரும் துரோணரும் வீரர்கள்தான். அங்கே பார் அவர்கள் வீரனுக்குரிய கடமையினைச் செய்ய தயாராக உன் எதிரே நிற்கிறார்கள்.அதனால் நீ உனது கடமையைச் செய்" என்றார் கிருஷ்ணபிரான்.

அர்ச்சுனனும், கிருஷ்ணனை வணங்கி, " பரமாத்மாவே...நான் உன்னிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டேன்.

எனது கடமைகள் என்ன என்று எனக்கு எடுத்துரைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறான்.

அபோதுதான் கிருஷ்ண பரமாத்மா அவனுக்கு கீதையை உபதேசம் செய்கிறார்.

"யாருக்காக நீ துயரப்படத் தேவையில்லையோ, அவர்களுக்காக துயரம் அடைகிறாய்.ஞானிகள் வாழ்பவர்களுக்காகவோ இறந்தவர்களுக்காவோ துயரமே அடைவதில்லை.உன்னால் பீஷ்மர், துரோணர் என்ற இரு மனித வடிவங்களைத்தான் பார்க்க முடிகிறது.அந்த வடிவங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆத்மாக்கள் ஏறியுள்ள வாகனங்கள்தான் என்பதை அறிவாயா??

.நான்,நீ, இந்த அரசர்கள் அனைவருமே எவருமே முன்பு இல்லாமல் இருந்ததில்லை. இந்த உடல்கள் அழிந்துவிடுகின்ற காரணத்தால், நாம் இல்லாமல் போனதும் இல்லை.ஆன்மா ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு உடலை தனது வாகனமாகக் கொள்கிறது.அந்த உடலின் மூலமாக சில அனுபவங்களைப் பெற்றுக்கொள்கிறது.ஆத்மா குடிகொள்ளும் உடலுக்குத்தான் அழிவே தவிர ஆத்மாவுக்கு அழிவில்லை.

இந்த சுலோகத்தில் பகவான் ஆத்மாவின் அழியாத் தன்மையைக் கூறுகிறார்.

ஹிந்து மதம் மறு பிறவியில் நம்பிக்கை கொண்டது.ஆத்மா அழிவற்றது என்னும்போதுதான் மறுபிறப்பு சாத்தியம் ஆகிறது.

சில சமயங்களில் ஐந்து வயதுக் குழந்தை ராக சுத்தமாகப் பாடுவதைப் பார்க்கலாம்.10 வயதுச் சிறுமி எவ்வளவு கஷ்டமான கணக்கிற்கும் நொடியில் விடை கூறுவதைக் காண்கிறோம்.5 வயதுக் குழந்தை ராகப் பயிற்சி பெற்று இம்மியளவும் பிசகாமல் பாடுவது இயலாத காரியம்..

10 வயதுக் குழந்தை கணிதத்தைப் படித்து மேதாவியாக விளங்குவதும் இயலாத காரியம்தான். ஆனால் இவற்றுக்கெல்லாம் விளக்கம் என்ன???ஆத்மாவின் அழியாத்தன்மை, மறுபிறப்பு இவற்றைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?

ஐம்புலனும் உடலோடு சம்பத்தப்பட்டதினால், குளிர்,வெப்பம், இன்பம் துன்பம் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றன.அது ஆத்மாவுக்கு உரியது அல்ல.அதனால்தான் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொண்ட ஞானிகள் எதனாலுமே கலக்கம் அடைவதில்லை.

இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக யார் கருத்தில் கொள்கிறார்களோ அவர்களே ஞானியாகியாகிறார்கள்.இன்ப துன்பங்களினால்

பாதிக்கப்படாமல் வாழ்வது என்றால், ஒருவன் மரக்கட்டைபோல் இருக்கவேண்டும் என்று பொருள் அல்ல.

"எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் வாழ்வது வேறு.

உணர்ச்சிகளின் பாதிப்புக்கு உள்ளாகாமல் வாழ்வது என்பது வேறு" இந்த உண்மையை உணர்பவன் ஆத்ம சொரூபத்தில் கலந்துவிடுகிறான்.

உலகமெல்லாம் பரவிய பொருள் அழிவற்றது. அழியாப் பொருளை அழிக்க யாராலும் முடியாது.

அழிவற்ற மெய்தான் உலகெங்கும் வியாபித்து நிற்கிறது

உதாரணத்துக்கு களிமண்ணை எடுத்துக்கொள்வோம்.அதைப் பயன்படுத்திப் பானை செய்கிறோம். குடம் செய்கிறோம்.

கூஜா செய்கிறோம்.தட்டு, பொம்மை என்று விதம் விதமாகச் செய்கிறோம்.செய்யப்பட்ட பொருள் ஒவ்வொன்றையும் தோற்றத்தைக் கொண்டு விதம் விதமான பெயரிட்டு அழைக்கிறோம்.இருந்தாலும் அவை அனைத்துக்கும் ஆதாரமான பொருள் களிமண்தானே?

மண்ணில் இருந்து அவை உருப்பெறுகிறது. அழியும்பேந்து மண்ணுடன் கலந்துவிடுகிறது.

இதில் மண் மட்டுமே மெய். மற்றதெல்லாம் பொய்.

ஆகவே இந்தப் பிரபஞ்சத் தோற்றத்துக்கும் ஆதாரமாக அழியாத மெய்ப்பொருள் இருக்கிறது. அதை அழிக்க யாராலும் முடியாது.

இதையெல்லாம் அர்ச்சுனனுக்குக் கூறிய கிருஷ்ணபிரான், உடல்களை அழிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தர்மத்தை நிலைநாட்டு

என்கிறார். அர்ச்சுனன் பீஷ்மரது உடலை அது பீஷ்மர் என்று எண்ணுவது தவறல்லவா? அவன் பீஷ்மரின் உடலை மட்டும்தான் அழிக்கப் போகிறான். பிஷ்மரை அல்ல!! ஏனென்றால் ஆத்மா அழிவது இல்லை

ஒரு செயலை எப்படிச் செய்யவேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

துன்பம், லாபம், நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளை ஒன்றாகவே ஏற்றுக்கொண்டு அந்தச் செயலை செய்யவேண்டும்.அதனால் நீ எந்தவித இழப்பையும் அடையமாட்டாய்.

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிப்பது அறிவுப் பூர்வமானது.

லாபத்தையும் நட்டத்தையும் ஒன்றாகக் கொள்வது மனது பூர்வமானது.

வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகப் பார்ப்பது தேகப் பூர்வமானது.

இந்த மூன்றில் இரண்டு குணங்களை பெற்றாலே அவன் கர்மயோகி ஆகிவிடுகிறான்.

கடலில் செல்லும் ஒருவன் அலைகளே இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லவா?

ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்டது கடலின் குணம்.அந்தக் குணத்தை ஏற்றுக்கொள்பவன்தான் கடலில் பயணம் செய்யமுடியும்.

அதுபோலதான், வாழ்க்கையிலும். இன்பம் துன்பம் வெற்றி தோல்வி, என்னும் அலைகள் இல்லாமல் வாழ்வென்பதே கிடையாது.

அலைகளுக்குப் பயந்துவிடக் கூடாது. அதே சமயம் அலைகளால் அடித்துச் சென்றுவிடாமல் துணிச்சலாக வாழவும் வேண்டும்.

இத்தகைய வாழ்க்கையை ஒருவன் பெறவேண்டுமானால், அவன் தன்னைப் பற்றி முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

கடமை எது என்று ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் பிறகு எப்படிச் செயல்படுவது என்பதில் குழப்பம் இருக்காது.

எந்த ஒன்றிலும் பர்றில்லாமல் அவன் கடமையைச் செய்தால் அவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக